Saturday, August 15, 2009

கவிதை இறகு- ஆவணி

முந்தித்தவம்
-சுயம்புலிங்கம்.
நீ ஒரு ஆம்பள
உனக்கு ஒரு பொண்டாட்டி......

புள்ளைகளுக்கு
கலக்டர் வேல வேண்டாம்.......
ஒரு எடுபிடி வேல
வாங்கிக் கொடுக்க முடியாது
உன்னால.......

வீடு வித்து
வாயில போட்டாச்சி.......
தாலிநூல் வித்துத் தின்னாச்சி......
கம்மல் இருக்கா.....
மூக்குத்தி இருக்கா.....

வீட்டு வாடகைக்கு
பொம்பள ஜவாப் சொல்லணும்

விடிஞ்சாப் போற
அடஞ்சா வாற

மண்ணெண்ண அடுப்பில் சமச்சி
வீடு பூராவும் கரி

ஒரு பாவாடைக்கு
மாத்துப் பாவாட கெடையாது
முகத்துக்குப் பூச
செத்தியங்காணு
மஞ்சத்துண்டு இல்ல
நல்லாப் பொழைக்கறவா
சிரிக்கறா

ஒனக்கு
ஆக்கி அவிச்சி
ருசியா கொட்டணும்

கால் பெருவிரலை நீட்டி
ஒத்தச் செருப்பை
மெள்ள இழுத்தேன்
பாழாய்ப் போன ரப்பர்
வார் அறுந்திருக்கிறது

அவள் பின்கழுத்தில்
என் கண்கள்
செல்லமாய் விழுந்தன

அந்த மஞ்சக்கயிற்றில்
ஒரு ஊக்கு இருக்கு
கேக்கலாம்
கேளாமலேகூட
தென்னி எடுக்கலாம்

அவள் அழுவதைப் பார்க்க
இஷ்டம் இல்லை
செருப்பை விட்டுவிட்டு
நடக்கிறேன்.

No comments:

Post a Comment