Thursday, January 28, 2010
செல்லம்மா
அருகே..
ஒரு நெளிந்த 'தம்' மின்
உச்சித் தலை எரிய..
நீ
வட்டமிட்டு அனுப்பிய வளையங்களில்..
நிக்கோடின் வாசமோ..
பிரவுன் நிற காரமோ..
பயணமாகிறது..
சாலை கடக்கக் காத்து நிற்கும்..
பள்ளிச் சிறுமியின்..
பச்சை ரிப்பனிலும்..
நாசித் துளையிலும்..
-இளங்கோ
வீதிகளும் வீடுகளும்
அடை மழையின் உச்சத்தில்
வீதிகளில் தண்ணீர்
நிரம்பியிருந்தது.
வீடுகளோ ஏரிகளை
ஆக்கிரமத்திருந்தன.
-பா.சதீஸ் முத்து கோபால்.
கட்டை விரல் பகுதியில்
தேய்ந்தும்,
மற்ற விரல்கள் பகுதியில்
அச்சு பதிந்தும்,
உழைத்து நிறம் மங்கிய
அப்பாவின் காதி செருப்பால்
பக்கத்தில் பளபளக்கிறது
மகனின் ரீபோக்.
ஒன்றில் சற்றே
வார் அறுந்த வுட்லாண்ட்ஸ்.
இன்னொரு காலில்
தையல்கள் சந்தித்த
ரப்பர் செருப்பு என
வறுமையிலும் சமத்துவத்தை
பறைசாற்றி அலைகிறான்
பேப்பர் பொறுக்கும் சிறுவன்.
இருச்சக்கர விபத்து,
கடற்கரை களிப்பு,
கலவர துப்பாக்கிச்சூடு,
ஜோடி மாறிடும்
திருமண வீடு,
தேய்ந்துவிட்ட அலட்சியம்...
என நிகழ்ந்த சம்பவத்தின்
மௌன சாட்சியாய் இருக்கிறது
ஒவ்வொரு ஒற்றை செருப்பும் !
- சஜயன் . பெண்ணுரிமை பேசிக் கொண்டிருக்கிறான்
பாரதி
பின்புலத்தில்
புடவையை தோளைச்சுற்றி
இறுக்கிக் கொள்கிறாள் செல்லம்மா.
- லதாமகன்.
Friday, January 22, 2010
நீ என்னிடம் பேசியதை விட...
Thursday, January 21, 2010
சாலையோரம்
தலைவிரித்து இலைகளின்றி மரம்.
கருத்த இருள் கவிய
இருக்கும் ஒளியும் பயமாய் ஒதுங்கும்.
தூரத்து மலைகளில் மினுக்கும் வீடுகளில்
பேய்களோ வசிக்கும் ?
வராத பஸ்.
காத்திருக்கும் நான்.
அருகிலே என்நண்பன்
ஒண் டூ திரீ
ஃபோர் பை சிக்கனா
உங்கப்பா எங்கப்பா
எருமக்கடா
தொந்தரவு செய்யும்
நண்பனில்லாத வாழ்க்கை நரகம்
-டி.பிரியா.
'வெட்கம்' என்றும் வரலாம்
எளிமை
Tuesday, January 19, 2010
கவிதை இறகு-தை
சாணிமெழுகிய சிறுதரை வளைத்து
கவிழ்ந்து கிடக்கும் இந்தக் கூரையின்
ஈர்க்குக் கட்டங்களில் புகும்
நிலவொளிக் கோலத்தில்
சிரங்குகளைச் சொறிந்தபடி
வரிசையாய் படுத்திருப்போம்,
“பெண் பிள்ளைகள் வாசலில் படுக்கக்
கூடாதெ”ன்ற
அப்பாவின் கட்டளையால்
தூக்கத்தில் புரண்டு
அடுக்குப் பானைகளை
உதைத்துத் தள்ளி நொறுக்கியதிலிருந்து
மூங்கில்தட்டியில் சாக்குக் கட்டிய
கதவோரம் மாற்றப்பட்டது
அக்காவின் பிய்ந்த பாய்.
பனைமட்டையடைத்த
முன்தாழ்வாரத்தில்
ஒண்டிநிற்கும் குஞ்சுத்தாய் கோழி
“பக் பக”; கெனக் கத்தும் போதெல்லாம்
பாம்பு புகுந்திருக்குமோ என்ற
பயம் ஒளித்து
கோழிக்குத் துணிச்சல்போல்
தனக்குத்தானே…
தைரியம் சொல்லிக்கொள்ளும் அம்மா.
மூன்றுபடை மண்சுவர் மீது
கவிழ்ந்து கிடக்கும் பானைச் சட்டிகள்
அண்டா குவளை…நெல் மூட்டைகள் என
பரவலாகத் திருடு போய்க்கொண்டிருக்கின்றன
ஊருக்குள்.
குலதெய்வம் ஐயனார் கூடவே இருப்பதால்
நம் வீட்டுப்பக்கம்
திரும்பக் கூட முடியாது திருடனால்
உறங்கியிருப்போம் என்று
அப்பாவிடம் பெருமை கொண்ட
அம்மாவை மடக்கினாள்
ஒளி பார்த்து விழித்திருந்த தங்கை
எப்படி வருவான் திருடன்??
சுண்ணாம்பும் வெல்லமும் குழைத்து
ஓட்டையடைத்து…உலை கொதிக்கும்
சோற்றுப் பானை…
விளிம்பு நெளிந்து வெடித்தத் தட்டுகள்
எதை எடுப்பான் இஙகு வந்து?
குடிக்கிற குவளையைச் சொல்..!
கருப்புக்கட்டியும்
பதநீரும் போதவில்லை யென்று
சுவரில் அடித்து…
நாங்கள் கோரமாக நெளித்த“குவளைகளை எடுத்து வந்து
இதை நீ கூப்பிட்டுக் கொடுத்தாலும்
வாங்கிக் கொள்வானா திருடன்?
பேசாமல் படும்மா…ஐயனாராம் ஐயனார்”
பதிலுக்கு அதட்ட
சிரித்தால் அறவே பிடிக்காத
அப்பாவும் எங்களுடன்
வெகுநேரம் சிரித்த
ஒலியடங்கியபின்
நிலவில் தெரிந்த
ஆலமரத்தடியில்
அழுதுகொண்டிருந்தாள் அம்மா
அவளின் கண்ணீர்த்துளிகள்
எண்ண முடியாத நட்சத்திரங்களாக
மின்னிக் கொண்டிருந்தன.
-இளம்பிறை.