Monday, December 24, 2012

மின்னல்


ககனப் பறவை
நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை

கடலுள் வழியும் அமிர்த தாரை
கடவுள் ஊன்றும் செங்கோல்

- பிரமிள் .

கவிதை இறகு -மார்கழி

பயணம் முடிந்த பின்பு
நழுவ விட்ட பஸ் டிக்கெட்

டைப்ரைட்டர் உருளையிலே
பட படக்கும் கார்பன் தாள்

மலைச்சாரல் சாய்ந்திறங்கி
நனைக்காத சாலை ஓரம்

அசைகின்ற வைப்பர் நுனி
துடைக்காத மழைப் புள்ளி 

 நிராகரிப்பின் சின்னச் சின்ன 
விசும்பல்கள் எனக்குள்ளே 

 -தி.சந்தானம்
 "நீ...நான்...மற்றும்.."

Wednesday, November 28, 2012

நீ


நான் பார்க்கும்
இடங்களில்லாம்
நீ இருக்கின்றாய்,
நான் கேட்கும்
ஒலிகளிலெல்லாம்
நீ சிரிக்கின்றாய்.

என் இரவில் நிலவாகவும்
என் கவிதை கனவாகவும்
இருக்கின்றாய்.
சமயங்களில்
நானாகவும்
இருக்கின்றாய்.

இப்படி
எல்லாமுமாக நீ
இருப்பதால்தான்
நான்
நானாகவே
இருப்பதில்லை

- கவிதா இராமகிருஷ்ணன்.


உன்னுடைய வட்டமும்,
என்னுடைய வட்டமும்
ஒன்றாகக் கலந்து விட்டாலும்
நாமிருவரும்
இன்னும்
தனித்தனிதான்
அறிமுகங்களில்
என்ன
நிகழ்ந்து விடப் போகிறது?
சமாதானப் படுத்திக்
கொள்வோம்.

- சங்கரி.


தன் தலைமுடியைத் 
தானே பற்றிக்கொண்டு
விடுவிக்கும் உபாயம்
அறியாமல் 
வீறிட்டு அழும்
சிசுவைப் போல்
உன் நினைவுகளில் நானும்

-தனலெட்சுமி பாஸ்கரன் 

Monday, November 19, 2012

கவிதை இறகு - கார்த்திகை

விதி

நடந்தே அழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி

- வல்லிக்கண்ணன்.

கவிதை இறகு - ஐப்பசி

மழை - கமலா தாஸ் கவிதை

களையிழந்த அப்பழைய வீட்டைவிட்டு வந்துவிட்டோம்
நான் வளர்த்த நாய் அங்கு மரித்துப் போனது
அதைப் புதைத்த இடத்தில் நட்ட ரோஜாச் செடி
இரண்டு முறை பூத்திருந்த வேளையில்
மேலும் வேதனையைப் பொறுக்க மாட்டாமல்
வேரோடு அதையும் பிடுங்கி எடுத்து
வேகமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு
கிளம்பி விட்டோம்..

எங்கள் புத்தகங்களுடனும்
துணிகளுடனும் நாற்காலிகளுடனும்.
இப்போது புதிய வீட்டில் வாழ்கிறோம்
இங்குள்ள கூரை ஒழுகுவதில்லை
ஆனால் இங்கு மழை பெய்யும் போது
நனைகிற அந்த வெற்று வீட்டையேப் பார்க்கிறேன்.
கேட்கவும் செய்கிறேன்..

என் நாய் இப்போது தனித்து உறங்கும் இடத்தில்
விழுகிற மழையின் சத்தத்தை.

ஆங்கில மூலம்:
“The Rain”  By Kamala Das
[From Only The Soul Knows How To Sing]

Thursday, September 27, 2012

முடியுமா மிஸ்?

தாமதமாக வந்ததற்கு
மன்னிக்க வேண்டும் மிஸ்
நடந்ததை கேளுங்கள் - பிறகு
தண்டனை தாருங்கள்

புத்தகப்பை சுமையுடன்
ஊர்ந்து வந்தேன் மிஸ்
பனியில் குளித்த புற்களில்
தூக்கம் க்லைந்த பட்டுப்பூச்சிகள்
ஓட்டப்பந்தயம் நடத்தின மிஸ்

அசிங்கமாய் புத்தகத்தில் வரைந்திருந்த
அழகான வண்ணத்துப்பூச்சி
கையில் வந்தமர்ந்து
கண்ணை உருட்டி உருட்டி
கூடப் பறக்க அழைத்தது என்னை மிஸ்

புத்தகப்பை நசுக்கிக் கீழே
விழுந்து காயமாச்சு மிஸ்
குட்டி அணில் எட்டி நின்று
கண்ணாமூச்சி ஆடியது
சிட்டுக்குருவியும் என்னைப் பார்த்து
வாய்ப்பாட்டு பாடியது மிஸ்

காக்கா கூட கரைந்து கரைந்து
கதைகள் சொன்னது மிஸ்
உங்கள் தண்டனைக்குப் பயந்து
ஊர்ந்த என்னை எழுந்து நடக்க
எறும்புகள் சொன்னது மிஸ்

இவற்றையெல்லாம்
படித்தது எந்த பள்ளிக்கூடம்
என்று கேட்டேன் மிஸ்
பார்த்து கைகொட்டிச் சிரித்தன
பள்ளிக்கூடம் கேள்வி பதில்
பரீட்சை அடி உதை கூட
இல்லாமல் படிக்க முடியுமா மிஸ்?


-உதயசங்கர்

Wednesday, September 26, 2012

காத்திருக்கிறோம்

இந்த அறையை நோக்கி 
பூமியின் எப்பகுதியிலிருந்தும் 
ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை 

இந்த அறைக்கு 
நண்பர் என்றுசொன்ன 
எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை 

பறவையின் குரல் 
நாயின் குரல் 
வானின் குரல் 

எதுவும் தொட்டதில்லை 

சூரியனின் கதிருக்குக் 
காத்திருந்து காத்திருந்து 
மனமொடிந்ததுதான் மிச்சம் 

காற்று மட்டும் 
அறீயாமல் வந்து 
உயிரைக் காப்பாற்றுகிறது 

அறையும் நானும் 
காத்திருக்கிறோம் 
அறிமுகமான 
மனித முகம் வேண்டி 

 - பவுத்த அய்யனார்.
மேன்ஷன் கவிதைகள்.

வார்த்தைகளிலான பிரியம்



பிரியங்களை அறிவிக்கும் வார்த்தைகளை 
கூறி விளையாடும் பருவம் கடந்துவிட்டோம் 
என்றாலும் என் அன்பை 
வார்த்தைகள் கொண்டே 
வெளிப்படுத்த யத்தனிக்கிறேன் 

வார்த்தைகளற்ற அன்பை 
உணர மாட்டாயாயென்பது
எப்பொதும் உன் கேள்வியாக இருக்கிறது 
நீயும் வார்த்தைகளின்றி 
உணர்வாய் என்று தெரிந்தே 
சொல்லிக் கொண்டிருக்கிறேன் 
என் பிரியங்களை 

சொன்னால்தான் தீருமென்றில்லை
எதையும் அடைத்து வைக்கும் 
தீர்மானத்தை வலுக்கட்டயமாக 
அதீத அறிவோடுடான செயல்பாடுகளை தவிர்க்கிறேன் 

வார்த்தைகளால் அவிழ்கவியலாத
இறுக்கம் புதை மணலாக 
எனை புதைத்துக் கொள்ளலாம் 
வார்த்தைகளிலான பிரியங்களே
எப்பொதும் உதவியாக இருகின்றது 

உணர்வுகளும் வார்த்தைகளும் 
நிறைந்ததே என் பிரியம் 
தினம் பெய்யும் மழையாக
அதைக் கொண்டு உனை நனைக்கவே 
எப்பொதும் என் விருப்பம் 

-லாவண்யா சுந்தரராஜன் 
'நீர்க்கோல வாழ்வை நச்சி"

Monday, September 24, 2012

கவிதை இறகு - புரட்டாசி


இது ‘கின்லே’, என்னமோ ஈஸியா கேக்குற!

விரிந்து கிடக்கும்
தண்டவாள உதடுகளுக்கிடையே
ரயில் பெட்டிகள் பேசிக் கொள்ளும் மொழியின்
அர்த்தம் தேடி அழைந்தது மனது.

திசுக்களால் ஆன
பாராளுமன்ற வாதிகளின்  இதழ்களில் இருந்து
வெளிவரும் பட்ஜெட் உரையை விட
இரும்பு இதழ்களிலிருந்து பெறப்படும்

ரயில் பயணத்தின் ஓசைகள்
மனதுக்கு இதமானவை.
கூடவே ரயிலில்
பயணம் செய்தவர்களின் குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்த் திசைதிருப்பியது
என்னை.

கொடுத்த காசுக்கு இடம்பிடிக்கத் தெரியாது
குத்துக்காலிட்டு வழியில் கிடந்த பெரியவர்
தயங்கித் தயங்கி
இருக்கையிலிருந்தவரிடம் இறைஞ்சினா.

“கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க”
இரட்டுற மொழிதலில் பதில்வந்தது….

“இது பாட்டில் தண்ணிய்யா”

உள்ளுறை உவமம் அறியாப் பெரியவர்
“பாட்டில் தண்ணியா பரவாயில்லை
கொடுங்க”
என ஆவலாய்க் கை நீட்ட

“பனிரெண்டு ரூபாய் கொடுத்து வாங்கின
பாட்டில் தண்ணிய்யா
என்னமோ ஈசியா கேக்குற!”

ஈரப்பசையற்ற வார்த்தைகள் எதிர்பாய
பீறிட்டு வந்த பெரியவரின் தாகம்
தன்மானத்தோடு தொண்டைக் குழியிலேயே
தற்கொலையானது.

தண்ணீரால் ஒரு மனிதனின் இதயத்தை
இரும்பாக்க முடியும் என்ற நசவாதத்தைக்
கண்ட எனக்கு
சில இரும்பு இதயங்களை
அவலம் தாங்காது அலறும் பெட்டியின்
அர்த்தம் புரிந்தது அப்போது.

-துரை.சண்முகம்.

Tuesday, September 4, 2012

ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு


பஞ்சாரக் கோழிகள் சிறகடிப்பும்
கட்டிப்போட்ட நாய்களின் உறுமல்களும்
சின்னக் குழந்தை
ஆற்றாமையில் வடிக்கும் கண்ணீரும்
பொருள் கொள்ளாது நிகழ்கிறது
கிடையில்
ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு

-கவிஞர் சங்கரபாண்டியன்.
சந்ததிகள்
வேரறுக்கப்பட்டதை எண்ணி
புகைகிறது
அடுப்படியில்
மரம்.


-கவிஞர் சுரேஷ்.

நினைவுள் மீள்தல்

ஒளி ஓவியத்தின் ரேகைகளுள்
நான் தொலைந்து கொண்டிருக்கும்
இந்தப் பொழுதில்
நீ தலையணைக்கடியில் உன் விழிகளை
உதிர்ந்து விட்டு
ஒரு பிரமாண்டமான கனவுக்குள் புகுந்திருக்கக்கூடும்
ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்
அலைந்து திரியும் எந்தன் மனசு
குளிர்காலதின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும்
உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறது

நான் அந்த இருள் படிந்த
நான்கு சுவர்களின் நடுவே
நனைந்து போன பூனைக்குட்டியைப் போல்
இருக்கின்றேன் இப்போதும்
தனித்து.

-தானா.விஷ்ணு
"நினைவுள் மீள்தல்"

பறத்தல் பறவையியல்!

திறந்திருக்கிறது சாளரம்!
பகல்களில் முட்டிமோதிய கதவது!
பற்பல கனவுகளில் கண்டிருந்த நிகழ்வது!
இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
திறந்துவிட்டது சூறைக்காற்று!

பறந்துசெல்லும் வழியறிந்தும்,
பரந்த வானம் அழைத்தும்
சிறகசைக்க மனமின்றி
சிறைப்பட்ட சிற்றறைக்குள்,
சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
சிந்தை லயித்து நிற்கும்…

இயல் மறந்த பறவையதற்கு
பறவையென்ற பெயரும் எதற்கு?
பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

- கீதமஞ்சரி

Saturday, August 18, 2012

இன்னொன்றைப் பற்றி

ஒன்றைப் பற்றி நான் சொன்னால், அது
இன்னொன்றைப் பற்றியதாய் இருக்கிறது.
உண்மைதான்.
ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றைச் சொல்வது
இயலாது.
பினோஷே பற்றி எழுதுகிற போது
சுகார்த்தோ பற்றியும் மாக்கோஸ் பற்றியும்
ஹிற்லர் பற்றியும் எழுதப்படுகிறது.
சிலேயில் காணாமற் போனவன்
இன்னமும் செம்மணியில் புதையுண்டிருக்கிறான்.
மிருசுவில் புதைகுழியும் சூரியகந்தவினதும்
ஒரே கிடங்காகத் தான் தோண்டப்பட்டன.
இன்னும்
யாழ்நூலகத்தை எரித்த நெருப்பில் தான்
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள்
வடிக்கப்பட்டன.
அதே நெருப்பு ஆப்கானிஸ்தானில்
புத்தர் சிலைகளை வெடித்துத் தகர்க்கிறது.
ஷார்ப்வில் படுகொலைச் செய்தி
மிலாய் கிராமத்தின் படுகொலையையும்
ஜாலியன்வாலா பாக் படுகொலையையும்
எனக்குச் சொன்னது.
மாவீரன் பகத் சிங் தொங்கிய கயிற்றில் தானே
கயத்தாற்றில் கட்டப்பொம்மன் தொங்கினான்.
கற்சிலை மடுவில் இருப்பது, தனியே
பண்டார வன்னியனின் நினைவுச் சின்னமா?
இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஜேர்மனியில்
யூதர்கட்கான முகாங்கள் எப்போது மூடப்பட்டன?
மலேசியாவிலும் கம்யூனிஸ்ட்டுகட்கான
முகாம்களும்
தென்வியட்நாமின் மாதிரிக் கிராமங்களும்
தமிழகத்தின் அகதி முகாம்களும் எங்கிருந்து தொடங்கின?
உலகம்
ஒரு முட்கம்பி வேலியால் இரண்டாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் ஒரு தென்னாபிரிக்கனை
உள்ளே வராதே என்று சொன்ன பலகை,
ஒவ்வொரு தமிழ்க் கோவிலுள்ளும் ஒரு தமிழனை
நுழையாமல் தடுத்தது.
அமெரிக்காவின் கூ க்ளுக்ஸ் க்ளான் கையில்
ஏந்திய தீவட்டிகள் கொண்டு
கீழ் வெண்மணியில் மனிதர்
குடிசைகளுடன் எரிக்கப்பட்டனர்.
மட்டக்களப்புக்குப் போகும் வழியில்
தமிழனிடம் கேட்கப்படுகிற அடையாள அட்டையை
இஸ்ரேலிய சிப்பாயிடம் பலஸ்தீனியன் நீட்டுகிறான்
அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்தால்
அழிக்கப்பட்ட மொழி
துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள
குர்தியனின் மொழியல்லவா.
ஐ.ஆர்.ஏ. தடைசெய்யப்பட்டதாக அறிவிக்க்ப்பட்ட அன்று
குர்தியனதும் தமிழனதும் விடுதலை இயக்கங்கள்
தடைசெய்யப்பட்டு விட்டன.
ஹரி ட்ரூமன் ஹிரோஷிமாவில் எறிவித்ததும்
வின்ஸ்ற்றன் சேச்சில் ட்றெஸ்டெனில் எறிவித்ததும்
இன்றைய டீக்தாத் மீது அல்லவா விழுகின்றன.
வட அயர்லாந்தில் அமைதி காக்கப் போனவர்களே
வட இலங்கையிலும் அமைதி காத்தார்கள்.
“ஒற்றுமைகளில் அதிகம் இல்லை -
வேற்றுமையே முதன்மையானது” என்பவன் அறிவானா,
தென்னிலங்கையின் மானம்பெரிக்கும்
தமிழகத்தின் பத்மினிக்கும் இருந்த வேறுபாடு
மானம்பெரி இறந்ததும்
பத்மினி மணமானவள் என்பதுமே என?
கொடிகளின் நிறங்களும் தேசங்களின் பேர்களும்
தேசிய கீதங்களின் மெட்டுக்களும்
சீருடைகளின் நிறங்களும் வடிவமைப்பும் வேறு.
இந்த வேற்றுமைகள் கொண்டு மறைக்க இயலாத
ஒற்றுமை இருப்பதாலே தான்,
இஸ்ரேல் பற்றி எழுதினால்
சவூதி அராபிய தணிக்கை அதிகாரியும்
குர்திஸ்தான் பற்றி எழுதினால்
இலங்கை அதிகாரியும்
காஷ்மீர் பற்றிச் சொன்னால் பிலிப்பினிய அதிகாரியும்
உள்ளூர்ச் செய்திகள் பற்றிய
தணிக்கை விதிகள் மீறப்படுவதாகச் சினக்கிறார்கள்.
அது சரியானதே.
ஒன்றைப் பற்றி எழுதும் எவனாலும்
வேறொன்றைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடிகிறதா?

சீனத்துப் பெண்ணின் பாதங்களை இறுகப் பிணித்த
துணி அவிழ்க்கப்பட்டபோது
உடன் கட்டை ஏறிய இந்தியப் பெண்
உயிர்த்தெழுந்து நடந்தாள்.
ஒரு பலஸ்தீனப் பெண் போராளி
முழு அரபுப் பெண்ணினத்தையும் விடுதலை
செய்கிறாள்
ரஷ்யப் புரட்சி முழு ஆசியாவையும் ஆபிரிக்காவையும்
கொலனி ஆட்சியினின்று விடுதலை செய்தது.
கொலம்பியாவின் கெரில்லாப் பேராளியும்
மெக்ஸிகோவின் ஸப்பாட்டிஸ்டும்
பிலிப்பினிய மக்கள் படை வீரனும் ஒருவனே.
மறவாதே, காஷ்மீர் விடுதலைப் போராளி
ஈழத் தமிழனுக்காகத் தான் போராடுகிறான்.
எனவே
எந்த ஒன்றைப் பற்றிப் பேசும் போதும்
இன்னொன்று பற்றியும், ஏன்
எல்லாவற்றைப் பற்றியும் பேச முடிகிறது.

-சி. சிவசேகரம்.
"இன்னொன்றைப் பற்றி"

அழகாய் வேறென்ன இருக்கிறது?

இலையுதிர் காலத்தில்
எதைப்பற்றி நீ கேட்கிறாய்?
யாராலும் எழுதி விட முடியாக் கவிதை போல்
இந்தக் காதலும் நிகழ முடியாதது.
இராமனின் சந்தேகங்கள் தின்ற சீதையின்
வழி நெடுகிலும் பூக்களா உதிர்ந்து கிடந்தன?
சற்றேனுந் தயக்கமின்றி
நீண்ட தனிமைக்குத் தயாராகின்றன
முற்றத்து மரங்கள்.
எதிர்ப்பின்றி இலைகள் விழுதலை விட
அழகாய் வேறென்ன இருக்கிறது?
இப்போதைக்கு
காதல் பற்றிய கலந்துரையாடலைத் தள்ளி வைப்போம்.


-வினோதினி

ஹிம்ஸினி

ஹிம்ஸினி அவள் பெயர்.
எட்டு மணிக்குச் சந்தித்தால்
ஏழுமணிக்கு என்ன செய்தே என்பாள்.

பார்த்தால் குறைப்பார்வை
முழுக்கப்பார்க்கவில்லை என்பாள்.

பேசினால் போதாது என்பாள்
பேசுவதற்கா வந்தாய் என்பாள்

சொக்கி நின்றால் மக்கு என்பாள்
தொட்டிழுத்தால் முரடு என்பாள்

மென்மை காத்தால்
அன்பே இல்லையென்று
அநியாயப் பழி சொல்வாள்

திரட்டுப் பாலாய் திகட்டி எடுப்பாள்

முக்குளித்து முக்குளித்து மூழ்கினபின்பும்
நனையவில்லை பார் என்பாள்

நான் நிரம்பி வழிந்த அன்றைக்கும்
என் நேற்றைய தப்புக்கு அழுவாள்.

ஒரு நிமிடம் இரு
மூச்சு விடுகிறேன் என்றேன்

அவ்வளவு தான்
மூச்சடங்கிப்போய் விட்டாள்.

மிருத்யுஞ்சய ஜெபத்தில் மீட்டு
மடியில் போட்டுக்கொண்டேன்

முப்பதே நாள் பழக்கத்தில் இவளிடம்
முப்பது வருடம் கூட வாழ்ந்த ஹிம்ஸை.

எனினும் இவள் என் ஜீவ நிழல்.
என்னைப் புரட்டிபுரட்டிப்போடும்
இவள் காதலுக்கு மூன்று நிலைகள் .
உச்சம் அதி உச்சம் உன்னத உச்சம்

கொடுமையதில் என் திணறல்
எப்பொதைக்குமாக.


-மாலதி

கவிதை இறகு -ஆவணி

குணா (எ ) குணசேகரன்

காணவில்லை
பெயர் : குணா (எ ) குணசேகரன்
வயது : 31
அடையாளம் : கன்னத்தில் காசளவு
மச்சமொன்று காணப்படும்
காணாமல் போனபோது
நீல நிற டீ-ஷர்ட்டும்
கருப்பு நிற பேண்ட்டும்
அணிந்திருந்தான்.

பேருந்து நிலைய சுவரொட்டியை படித்து
முடித்து திரும்பியபோது
எதிரே குணசேகரன் நின்றுகொண்டிருந்தான்
சற்றே மனநிலை பிசகியவர்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தபடியால்
தயக்கத்தோடே அணுகினேன்
ஏகதிபத்தியத்தின் அத்துமீறல்களும்
ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராய்
கண்டனம் சொன்னான்
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து
வருத்தம் தெரிவித்தான்
புறநானுற்றின் 'தொடித்தலை விழுத்தாண்டினார்'
பாடலொன்றைக் குறிப்பிட்டுப் பேசினான்
பிகாஷோ ஓவியங்களை பார்த்திருக்கிறீர்களா என
வினவினான்


பாவம் அந்த வீடு
குணாவை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறது
பாவம் குணா
அந்த வீட்டை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறான்
வயிற்றை நிரவிக்காட்டி
பசிக்குது என்றவனுக்கு
உணவுபசரித்துக் கொண்டிருக்கிறேன்

காண்போர் தகவல் தெரிவிக்க வேண்டிய
தொலைபேசி எண் ஒன்று
சுவரொட்டியின் கீழே தரப்பட்டுள்ளது
நீங்கள் சரியென்று சொன்னால்
அவனை வீட்டில் சேர்த்துவிடலாம்

-இசை
"உறுமீன்களற்ற நதி"

அலைவுகள்

கடந்த பேயிரவில்தான்
சமீபித்திருந்தது
குறுக்கும் நெடுக்கும்
சிறகசைத்து நெய்த
கூட்டின் மரணம்

எடுத்துப் பத்திரப் படுத்திய
அறுபட்டக் கூடென்
மேசை மேல்
சலனமற்றுக் கிடக்க
ஓயாமல் மனதிலலைகிறது
கூடறுத்தக் காற்றும்
கூட்டைத் தவறிய
பறவையின் தவிப்பும்


-பொ.செந்திலரசு

Wednesday, August 15, 2012

அவன் சொன்னது

அவன் சொன்னான் -
எப்போதாவது நினைத்தால் நூறு வயசு
எப்போதும் நினைத்தால் ஆயிரம் வயசு

எப்போதாவது நினைத்தால் புரையேறும்
எப்போதும் நினைத்தால் அதன் பெயர் ஸ்வாசம்

எப்போது நிகழ்ந்தது என்றேன் அவனிடம்
எப்போதும் நிகழ்வது என்றான்

-உமாஷக்தி .
பரிவு

என்னை மன்னிக்க நேரிடும்
கணங்களில்
ஒரு தாயின் பரிவுக்கு சென்றுவிடுகிறாய்.

எம் குழந்தையின் தலையினைக்
கோதிய படி
உன் பார்வைகளால்
எல்லாவற்றினையும் துடைத்தெறிந்துவிடுகிறாய்

எல்லாவற்றினையுமென்றால்
என் தவறுகளை,
என் மீதான கோபங்களை,
இன்னமும் இருக்கக் கூடிய ஏதேனும் எல்லாவற்றையும்

- தானா.விஷ்ணு .
மழை ஏமாற்றும்
பிறிதொரு நாளில்
செத்துப்போகும் துணிச்சலோடு
நேற்றைய மழையில்
வெடித்துச் செடியாகியிருந்தது
ஒரு விதை

-நானற்காடன்
"சாக்பீஸ் சாம்பலில்"

Thursday, July 26, 2012

ரகசிய காதல்

தன்னந்தனியனாய்
தவறவிட்ட உன்னைத் தேடி

பதற்றப்பட்டு பரபரக்க
உரத்து உன் பெயர் கூவியழைக்க
திராணி இம்மியுமில்லை
கானுயிர்கள் விழிப்புறும் பட்சத்தில்

சருகுகளின் சப்தத்தைத் தவிர்க்க
நுனிக்காலில் நகர்கிறேன்

பட்சிகளின் பொந்துகளிலும்
பட்டைகளின் இடுக்குகளிலும்
சொல்லிவைக்கிறேன் உன்னைப்பற்றி
எங்கேனும் கண்டால்
தகவல் அனுப்பவென்று

சளைக்காமல் தொடர்வேன்
அதுவரையில்
கானகத்தைத்
தீண்டாதிருக்க வேண்டும் தீ

-வி.அமலன் ஸ்டேன்லி.

வாரா மழையும்;வரளும் ஆறும்

கடவுள் வணக்கம்
தமிழ் வணக்கம் சொல்லி
கூட்டம் போட்டது போதும்

செடி வணக்கம்
பூ வணக்கம் சொல்லி
கூட்டம் போட சொல்கின்றன
வாரா மழையும்
வரளும் ஆறும்


-பாலா.

Thursday, July 19, 2012

மூடுதல்

பாழ் வெளியில்
ஓர் அரண் அமைத்து
இன்றெனைக் காக்கிறேன்

அழைப்பின்
எந்தக் குரலுக்கும்
நான் விலக்கப் போவதில்லை
எனது அரணை

என்னிடம்மிருந்ததையெல்லாம்
ஒவ்வொரு முறையும்
பலவந்தமாகப்
பறித்துச் சென்றீர்கள் .

இன்று
இச் சாய்வு நாற்காலியில்
யாருக்கும் தயங்காமல்
கால்களை நீட்டி
அமர்ந்திருக்கிறேன்

இப்பொழுதுதான்
தைரியமாய் இருக்கிறேன்
பாதுகாப்பாய் இருக்கிறேன்

யாரையும் அனுமதிக்க மாட்டேன்
என்னிடமிருந்து
எதையுமே பெற முடியாது

பொறுக்க இயலாதபடி
கத்துகிறார்கள்
சத்தமிடுகிறார்கள்
தூங்கவிடுவதே இல்லை.
எனினும் என் தனிமையை
உருவாக்குகிறேன்
இந்த இரைச்சல்களின் உள்ளிருந்து

எப்போதாவது கேட்கிறது
புதுமையாய்
வியப்பூட்டும் அழைப்பு

யாரோ
எதையோ
கொடுக்க வந்திருக்கிறார்கள்

வஞ்சகமுள்ள அழைப்புகளின்
பயங்களால்
எனது அரணை இன்னும்
வலுப்படுத்துகிறேன்

வழி தவறி வந்த
தேவதைகள் சிலவும்
திரும்பிப் போயிருக்கக் கூடும்.

-சல்மா
"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்"

மென் பாதங்கள்

பனிப்பாளங்களின் குளிர்ச்சியை
என் கால்கள் தாங்காது
ஆனால் அதன் முடிவில் நீயிருந்தால்
உனக்காகத் துள்ளி வருவேன்
பனிக் கதவுகள் ஒரு பொருட்டல்ல....

நடுப்பகல் சூரியக் கைகளின்
வெம்மை தாங்காது என் கால்கள்
ஆனால் எரிமலையின் உச்சியில்
உன்வீடு கட்டப்பட்டிருந்தால்
உனக்காக அக்னியில் நடமாடுவேன்
திரவகக் குழம்புகள் ஒரு பொருட்டல்ல....

மென்மைப் பூக்களை மட்டுமே
தொடுவேன் நான் ; என் கால்கள்
முட்களின் கூர்மையைத் தாங்காது
ஆனால் முட்கள் என் கால்களை
முத்தமிடுவதை நீ விரும்பினால்
சாகும்வரை அதில் நடனமாடுவேன்
முட்கள் எனக்கு பொருட்டல்ல.....

ஆனால்
உன் கோழைத்தன்மையை என்
கால்கள் பொறுத்துக்கொள்வதேயில்லை
மிதித்து அழிக்கவேவிரும்புகின்றன

காதலை சிலசமயம்
கால்களும் தீர்மானிக்கின்றன.

- கவிஞர் தாமரை .
"ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்"