Saturday, August 18, 2012

இன்னொன்றைப் பற்றி

ஒன்றைப் பற்றி நான் சொன்னால், அது
இன்னொன்றைப் பற்றியதாய் இருக்கிறது.
உண்மைதான்.
ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றைச் சொல்வது
இயலாது.
பினோஷே பற்றி எழுதுகிற போது
சுகார்த்தோ பற்றியும் மாக்கோஸ் பற்றியும்
ஹிற்லர் பற்றியும் எழுதப்படுகிறது.
சிலேயில் காணாமற் போனவன்
இன்னமும் செம்மணியில் புதையுண்டிருக்கிறான்.
மிருசுவில் புதைகுழியும் சூரியகந்தவினதும்
ஒரே கிடங்காகத் தான் தோண்டப்பட்டன.
இன்னும்
யாழ்நூலகத்தை எரித்த நெருப்பில் தான்
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள்
வடிக்கப்பட்டன.
அதே நெருப்பு ஆப்கானிஸ்தானில்
புத்தர் சிலைகளை வெடித்துத் தகர்க்கிறது.
ஷார்ப்வில் படுகொலைச் செய்தி
மிலாய் கிராமத்தின் படுகொலையையும்
ஜாலியன்வாலா பாக் படுகொலையையும்
எனக்குச் சொன்னது.
மாவீரன் பகத் சிங் தொங்கிய கயிற்றில் தானே
கயத்தாற்றில் கட்டப்பொம்மன் தொங்கினான்.
கற்சிலை மடுவில் இருப்பது, தனியே
பண்டார வன்னியனின் நினைவுச் சின்னமா?
இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஜேர்மனியில்
யூதர்கட்கான முகாங்கள் எப்போது மூடப்பட்டன?
மலேசியாவிலும் கம்யூனிஸ்ட்டுகட்கான
முகாம்களும்
தென்வியட்நாமின் மாதிரிக் கிராமங்களும்
தமிழகத்தின் அகதி முகாம்களும் எங்கிருந்து தொடங்கின?
உலகம்
ஒரு முட்கம்பி வேலியால் இரண்டாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் ஒரு தென்னாபிரிக்கனை
உள்ளே வராதே என்று சொன்ன பலகை,
ஒவ்வொரு தமிழ்க் கோவிலுள்ளும் ஒரு தமிழனை
நுழையாமல் தடுத்தது.
அமெரிக்காவின் கூ க்ளுக்ஸ் க்ளான் கையில்
ஏந்திய தீவட்டிகள் கொண்டு
கீழ் வெண்மணியில் மனிதர்
குடிசைகளுடன் எரிக்கப்பட்டனர்.
மட்டக்களப்புக்குப் போகும் வழியில்
தமிழனிடம் கேட்கப்படுகிற அடையாள அட்டையை
இஸ்ரேலிய சிப்பாயிடம் பலஸ்தீனியன் நீட்டுகிறான்
அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்தால்
அழிக்கப்பட்ட மொழி
துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள
குர்தியனின் மொழியல்லவா.
ஐ.ஆர்.ஏ. தடைசெய்யப்பட்டதாக அறிவிக்க்ப்பட்ட அன்று
குர்தியனதும் தமிழனதும் விடுதலை இயக்கங்கள்
தடைசெய்யப்பட்டு விட்டன.
ஹரி ட்ரூமன் ஹிரோஷிமாவில் எறிவித்ததும்
வின்ஸ்ற்றன் சேச்சில் ட்றெஸ்டெனில் எறிவித்ததும்
இன்றைய டீக்தாத் மீது அல்லவா விழுகின்றன.
வட அயர்லாந்தில் அமைதி காக்கப் போனவர்களே
வட இலங்கையிலும் அமைதி காத்தார்கள்.
“ஒற்றுமைகளில் அதிகம் இல்லை -
வேற்றுமையே முதன்மையானது” என்பவன் அறிவானா,
தென்னிலங்கையின் மானம்பெரிக்கும்
தமிழகத்தின் பத்மினிக்கும் இருந்த வேறுபாடு
மானம்பெரி இறந்ததும்
பத்மினி மணமானவள் என்பதுமே என?
கொடிகளின் நிறங்களும் தேசங்களின் பேர்களும்
தேசிய கீதங்களின் மெட்டுக்களும்
சீருடைகளின் நிறங்களும் வடிவமைப்பும் வேறு.
இந்த வேற்றுமைகள் கொண்டு மறைக்க இயலாத
ஒற்றுமை இருப்பதாலே தான்,
இஸ்ரேல் பற்றி எழுதினால்
சவூதி அராபிய தணிக்கை அதிகாரியும்
குர்திஸ்தான் பற்றி எழுதினால்
இலங்கை அதிகாரியும்
காஷ்மீர் பற்றிச் சொன்னால் பிலிப்பினிய அதிகாரியும்
உள்ளூர்ச் செய்திகள் பற்றிய
தணிக்கை விதிகள் மீறப்படுவதாகச் சினக்கிறார்கள்.
அது சரியானதே.
ஒன்றைப் பற்றி எழுதும் எவனாலும்
வேறொன்றைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடிகிறதா?

சீனத்துப் பெண்ணின் பாதங்களை இறுகப் பிணித்த
துணி அவிழ்க்கப்பட்டபோது
உடன் கட்டை ஏறிய இந்தியப் பெண்
உயிர்த்தெழுந்து நடந்தாள்.
ஒரு பலஸ்தீனப் பெண் போராளி
முழு அரபுப் பெண்ணினத்தையும் விடுதலை
செய்கிறாள்
ரஷ்யப் புரட்சி முழு ஆசியாவையும் ஆபிரிக்காவையும்
கொலனி ஆட்சியினின்று விடுதலை செய்தது.
கொலம்பியாவின் கெரில்லாப் பேராளியும்
மெக்ஸிகோவின் ஸப்பாட்டிஸ்டும்
பிலிப்பினிய மக்கள் படை வீரனும் ஒருவனே.
மறவாதே, காஷ்மீர் விடுதலைப் போராளி
ஈழத் தமிழனுக்காகத் தான் போராடுகிறான்.
எனவே
எந்த ஒன்றைப் பற்றிப் பேசும் போதும்
இன்னொன்று பற்றியும், ஏன்
எல்லாவற்றைப் பற்றியும் பேச முடிகிறது.

-சி. சிவசேகரம்.
"இன்னொன்றைப் பற்றி"

அழகாய் வேறென்ன இருக்கிறது?

இலையுதிர் காலத்தில்
எதைப்பற்றி நீ கேட்கிறாய்?
யாராலும் எழுதி விட முடியாக் கவிதை போல்
இந்தக் காதலும் நிகழ முடியாதது.
இராமனின் சந்தேகங்கள் தின்ற சீதையின்
வழி நெடுகிலும் பூக்களா உதிர்ந்து கிடந்தன?
சற்றேனுந் தயக்கமின்றி
நீண்ட தனிமைக்குத் தயாராகின்றன
முற்றத்து மரங்கள்.
எதிர்ப்பின்றி இலைகள் விழுதலை விட
அழகாய் வேறென்ன இருக்கிறது?
இப்போதைக்கு
காதல் பற்றிய கலந்துரையாடலைத் தள்ளி வைப்போம்.


-வினோதினி

ஹிம்ஸினி

ஹிம்ஸினி அவள் பெயர்.
எட்டு மணிக்குச் சந்தித்தால்
ஏழுமணிக்கு என்ன செய்தே என்பாள்.

பார்த்தால் குறைப்பார்வை
முழுக்கப்பார்க்கவில்லை என்பாள்.

பேசினால் போதாது என்பாள்
பேசுவதற்கா வந்தாய் என்பாள்

சொக்கி நின்றால் மக்கு என்பாள்
தொட்டிழுத்தால் முரடு என்பாள்

மென்மை காத்தால்
அன்பே இல்லையென்று
அநியாயப் பழி சொல்வாள்

திரட்டுப் பாலாய் திகட்டி எடுப்பாள்

முக்குளித்து முக்குளித்து மூழ்கினபின்பும்
நனையவில்லை பார் என்பாள்

நான் நிரம்பி வழிந்த அன்றைக்கும்
என் நேற்றைய தப்புக்கு அழுவாள்.

ஒரு நிமிடம் இரு
மூச்சு விடுகிறேன் என்றேன்

அவ்வளவு தான்
மூச்சடங்கிப்போய் விட்டாள்.

மிருத்யுஞ்சய ஜெபத்தில் மீட்டு
மடியில் போட்டுக்கொண்டேன்

முப்பதே நாள் பழக்கத்தில் இவளிடம்
முப்பது வருடம் கூட வாழ்ந்த ஹிம்ஸை.

எனினும் இவள் என் ஜீவ நிழல்.
என்னைப் புரட்டிபுரட்டிப்போடும்
இவள் காதலுக்கு மூன்று நிலைகள் .
உச்சம் அதி உச்சம் உன்னத உச்சம்

கொடுமையதில் என் திணறல்
எப்பொதைக்குமாக.


-மாலதி

கவிதை இறகு -ஆவணி

குணா (எ ) குணசேகரன்

காணவில்லை
பெயர் : குணா (எ ) குணசேகரன்
வயது : 31
அடையாளம் : கன்னத்தில் காசளவு
மச்சமொன்று காணப்படும்
காணாமல் போனபோது
நீல நிற டீ-ஷர்ட்டும்
கருப்பு நிற பேண்ட்டும்
அணிந்திருந்தான்.

பேருந்து நிலைய சுவரொட்டியை படித்து
முடித்து திரும்பியபோது
எதிரே குணசேகரன் நின்றுகொண்டிருந்தான்
சற்றே மனநிலை பிசகியவர்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தபடியால்
தயக்கத்தோடே அணுகினேன்
ஏகதிபத்தியத்தின் அத்துமீறல்களும்
ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராய்
கண்டனம் சொன்னான்
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து
வருத்தம் தெரிவித்தான்
புறநானுற்றின் 'தொடித்தலை விழுத்தாண்டினார்'
பாடலொன்றைக் குறிப்பிட்டுப் பேசினான்
பிகாஷோ ஓவியங்களை பார்த்திருக்கிறீர்களா என
வினவினான்


பாவம் அந்த வீடு
குணாவை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறது
பாவம் குணா
அந்த வீட்டை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறான்
வயிற்றை நிரவிக்காட்டி
பசிக்குது என்றவனுக்கு
உணவுபசரித்துக் கொண்டிருக்கிறேன்

காண்போர் தகவல் தெரிவிக்க வேண்டிய
தொலைபேசி எண் ஒன்று
சுவரொட்டியின் கீழே தரப்பட்டுள்ளது
நீங்கள் சரியென்று சொன்னால்
அவனை வீட்டில் சேர்த்துவிடலாம்

-இசை
"உறுமீன்களற்ற நதி"

அலைவுகள்

கடந்த பேயிரவில்தான்
சமீபித்திருந்தது
குறுக்கும் நெடுக்கும்
சிறகசைத்து நெய்த
கூட்டின் மரணம்

எடுத்துப் பத்திரப் படுத்திய
அறுபட்டக் கூடென்
மேசை மேல்
சலனமற்றுக் கிடக்க
ஓயாமல் மனதிலலைகிறது
கூடறுத்தக் காற்றும்
கூட்டைத் தவறிய
பறவையின் தவிப்பும்


-பொ.செந்திலரசு

Wednesday, August 15, 2012

அவன் சொன்னது

அவன் சொன்னான் -
எப்போதாவது நினைத்தால் நூறு வயசு
எப்போதும் நினைத்தால் ஆயிரம் வயசு

எப்போதாவது நினைத்தால் புரையேறும்
எப்போதும் நினைத்தால் அதன் பெயர் ஸ்வாசம்

எப்போது நிகழ்ந்தது என்றேன் அவனிடம்
எப்போதும் நிகழ்வது என்றான்

-உமாஷக்தி .
பரிவு

என்னை மன்னிக்க நேரிடும்
கணங்களில்
ஒரு தாயின் பரிவுக்கு சென்றுவிடுகிறாய்.

எம் குழந்தையின் தலையினைக்
கோதிய படி
உன் பார்வைகளால்
எல்லாவற்றினையும் துடைத்தெறிந்துவிடுகிறாய்

எல்லாவற்றினையுமென்றால்
என் தவறுகளை,
என் மீதான கோபங்களை,
இன்னமும் இருக்கக் கூடிய ஏதேனும் எல்லாவற்றையும்

- தானா.விஷ்ணு .
மழை ஏமாற்றும்
பிறிதொரு நாளில்
செத்துப்போகும் துணிச்சலோடு
நேற்றைய மழையில்
வெடித்துச் செடியாகியிருந்தது
ஒரு விதை

-நானற்காடன்
"சாக்பீஸ் சாம்பலில்"