Wednesday, June 12, 2013

கவிதை இறகு -வைகாசி



அப்பாவிச் சாட்சியின் கேள்விகள்

நெல்லும் கரும்பும் விளைந்த வயலில்
அடுக்கு மாளிகையின் அஸ்திவாரப் பள்ளத்தை
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
எந்திரமாய் இயங்கும் 
பெண்களின் கைகளில்
மண்சட்டிகள் மாறிக் கரையேறுகின்றன
ஆண்கள் உயர்த்தும் கடப்பாறைகள்
பூமியின் மார்பைக் குத்திக் கிழிக்கின்றன

வேகத்தைக் கண்டு வியப்பில் கண்மலர
வேடிக்கை பார்க்கிறான் ஒரு சிறுவன்
பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
என்று அவன் கேட்கவில்லை

நெல்லும் கரும்பும் இனி எப்படி விளையும்
என்று அவன் கேட்கவில்லை
நெல் இல்லாமல் இருப்பது எப்படி
என்று அவன் கேட்கவில்லை
இந்த உலகம் இருக்குமோ 
என்றும் அவன் கேட்கவில்லை
இனி தும்பிகளை எங்கே போய்த் தேடுவேன்
என்றும் அவன் கேட்கவில்லை

இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்
மோசடிக் கும்பலின் நாசகாரியம்
முடிவுற்ற பின்னாலாவது
இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்
அப்போது உலகம் தரும் பதில் என்ன ?


-பாவண்ணன்.

கவிதை இறகு -சித்திரை


தனித்து தோப்பாகு
கண் துடைக்க மாட்டேன்
ஒரு கவளம் ஊட்டமாட்டேன்
தலைகோதி
ஆறுதல் தரவும் மாட்டேன்
துக்கத்திற்கான ஆறுதல்
என்னிலிருந்து கிடைக்காது

ஆறுதல் உனது மோட்சத்தை
எந்திரத்திலிட்டு மாவாக்கியது
உதிரப்பாசம்
உச்சியிலிருந்து வீழ்த்தியது

என் மென்மையான இறகின் கீழ்
நீ கதகதப்பாய் இல்லை
கருகிப் போனாய்

நீ நீயாக இருக்கும் பொருட்டே
விரட்டுகிறேன்
தாய்க்கோழியாய்.

புரிந்து கொள்
மிகு பாசத்தில் நெட்டி வளர்த்தால்
பள்ளிப் பிள்ளையாய்
பலப்பம் தின்பாய்
கண்டெடுக்கச் சொல்லி கத்தினால்
பழத்தின் முள்பிளந்து
வாழ்வின் ருசியறிவாய்.

-எழில்வரதன்.