Saturday, December 19, 2009

திறந்த கடிதம்

மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனாருக்கு வணக்கம்
இப்பவும் (*2) தங்கைக்கு பாடம்
சொன்னபோது
தங்கள் பாட்டுத்திறம் கண்டு
இறும்பூது எய்தினேன். நிற்க.

அதே ஜோரில்
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஒரொக்கும்மே
என்றபடியே கேட்டேன் போனஸ்
முதலாளியிடம்

கம்யூனிஸ்ட் சங்காத்தமே
கடைக்கு ஆகாது என்று சொல்லி
இல்லம் நோக்கி அனுப்பி வைத்தார்.
மட்டை பழுத்தா மரத்துல.....
எனும் அம்மா.
.....யாய் எனும் அப்பா.

சரி கவிதையாவது எழுதலாம் என்றால்
இந்த இ.ஞா.திரவியம்,
கலாப்ரிய, ஞா.வெட்டியான்
இப்படி எல்லாரும்
நன்றாகவே கவிதை சமைக்கின்றனர்.

எனக்கும் கணையாழியில் கவிதை செய்வதைவிட
படிப்பதே சுகம் என்று படுகிறது.
ஆதலினால் தாங்கள் நேரில் வந்து
செல்வத்துப் பயனே ஈதல்
என்றியம்பி தனபால் ஸ்டோர்ஸ்
அதிபரை இசைபட வாழ வைக்க
வேண்டுகிறேன்

இப்படிக்கு,
சிதம்பரம் சாமிநாதனார் மகனார் முத்துக் குமரனார்.

-மேக குமாரன்.

Friday, December 18, 2009

கவிதை இறகு -மார்கழி

கூத்தாடி அப்பா
தபதப வென மத்தளத்துடன்
தாளமும் சுருதியும் சேர்ந்து கொள்ள
திரையின் கதவுகள் திறக்கப் படுகின்றன
பட்டுக்கோட்டைச் சந்தையிலே
பாட்டுடன் அப்பா பவனி வருகிறார்

கன்னக் கதுப்பில் வண்ணப் பூச்சு
கண்களைச் சுற்றி கருவளையங்கள்
அரிதாரத்தின் அவதாரமாய்
காலின் சலங்கை கலீரென்றிட
அப்பா அங்கே 'அடவு ' பிடித்திட
தப்பாதங்கே தாள வாத்தியம்

வெற்றிலைச் சீவல் மெல்லும் கூட்டமும்
'கள்ளு ' தண்ணியில் கலந்த கூட்டமும்
இருட்டுக் கும்பலில் திருட்டுக் காதலியை
இனம் கண்டிட இயலாமல் போக
கண்ணில் காமமும் கையில் பீடியும்
நினைவைச் சுட்டிட நிமிரும் கூட்டமும்

கடைவாய் கரையில் எச்சிலொழுக
கண்களில் உறக்கம் உச்சிமோர்ந்திட
கோரைப்பாயில் தாரைவார்த்த
கோவணம், சராயில்
குவியல் குவியலாய் பையன்கள் கூட்டமும்

அப்பா வருகையால்
ஆனத்தப்பட்டிடும்

அர்ச்சுனன் முதல் துரியோதனன் வரை
அத்துணைபேருக்கும் தோழன்
சுபத்திரைமுதல் இந்திராணிவரை
அத்துணைபேருக்கும் தோழி
மாதம் மும்மாரி மழை பெய்வதாய்
சாதித்திடும் மந்திரி.. என
அப்பா ஒரு அவதாரப் புருஷன்

ஆயகலைகள் அறுபத்து நான்கும்
அப்பாவிற்கு அத்துப்படியாம்..


முடமாய், ஊமையாய்,
மடையனாய், பேடியாய்
அப்பா செய்யும் சேட்டைகண்டு
கூட்டத்திருக்குக் கொண்டாட்டம்
ஆனால்

எனக்குள் மட்டும் இதயம் அழுதிடும்.

-நாகரத்தினம் கிருஷ்ணா.