Monday, July 25, 2011

தவறான கேள்விகளும் , சரியான பதில்களும்

ரோஜாப் பூவின் தாவரவியல் பெயர்?
(காதலியின் பெயர்)

மழை உருவாவது எங்ஙனம்?
அவள் கூந்தல் காற்றில் பரவும்வரை பொறுத்திருங்கள்.

இந்தியாவில் பாலைவனம் இருக்கிறதா?
அவள் பார்வை
எட்டாத தூரத்தில்
நின்று தேடுங்கள்.

ஒரு நிமிடத்துக்கு இதயம் எத்தனை முறை துடிக்கும்?
அவள் இருக்கையில் 144....
இல்லாதபோது 72...

ஆகஸ்ட் 6, வரலாற்றுக் குறிப்பு என்ன?
என் பிறந்த நாள்...
என் காதல் பிறந்த நாள்...
என் மனதிலும் இரோஷிமாவிலும் குண்டு விழுந்த நாள்.

சிந்து சமவெளி நாகரிகம் பற்றி எழுதுக?
அவள் இதழ் சிந்தும் சிரிப்புக்காக
இரண்டு முறை உடைமாற்றுகிறேன் வெட்கத்தை விட்டு வேறென்ன சொல்ல...

உலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன?
முறைக்கத் தெரியாத கண்கள்
வாடாமல்லியாகிவிட்ட ஜாதி மல்லிகை
உதடு தொட்டும் உயிர் பெறாத கைக்குட்டை..
அவளைச் சுமந்து பல்லக்கு ஆகாத சைக்கிள்..
லவ் லெட்டெர் தராத உள்ளூர் இளைஞர்கள்..
மௌனத்துக்கும் அர்த்தம் கண்டுபிடித்த நான்
இதையெல்லாம்... கவிதையென்று தெரியாமலே பதிவு பண்ணுகிற என் டைரி

சல்ஃப்யூரிக் அமிலத்தின் குணங்கள் என்ன?
அவளின் கோபப் பார்வையில் பொங்கும்...
நுரைத்து தணியும்,
பின் அமிர்தமாகும்.

பிளாஸ்மா சவ்வூடுருவலை விளக்குக?
ஆயிரம் கண்கள் விலக்கி,
என் பார்வை மட்டும் உள்வாங்கும் அவள் இதயம்.

நிலவில் பிராணவாயு உண்டா?
சத்தியமாக உண்டு.
அவளே என் ஆக்ஸிஜன்!

-பாலா.

Wednesday, July 20, 2011

அரேபிய வாழ்க்கை.....


பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவில் இருந்து-என்அப்பா எழுதினார்
பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும்
விமானமும் விசாவும் கிளர்ச்சியூட்டிய கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம் பிச்சைக்காரானாக
விழுவதற்குள் ஆவியாகும் பாலைவனத் தூறல்
போல்காணாமல் போனது கனவு!


கழிவறை சுத்தம் செய்யும் கைத்தொழிலொன்றில்
அப்பாவும் நானும் அழுக்கானதில்
சுத்தமானது - எங்கள்வீட்டு வறுமை!
ஆசையும் மோகமும் தொன்னூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு அறுபது நாட்கள்

எந்த விலக்கப்பட்ட கனியைத் தின்றோம்?
சபிக்கப்பட்டது எங்கள் இளமை!
வெட்கம் விலக்கி தொலை பேசிக்கும் தெரியாமல்
மனைவி தராத பதில் முத்தம்!
நானில்லை எனத் தெரிந்தும் நானாக இருப்பேனோ
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுருக வைக்கும் மரணங்கள்!


பிழைப்பு தேடிவாழ்வை இழந்தோம்.
விசா கடன் அடைக்கவே வேலை இருக்கு...
பிரியத்திற்குப் பட்ட கடன் அடைக்க வழி இருக்கா
நத்தைக் கூட்டிற்குள் நாலைந்து பேர்கள்
காய்ந்த ரொட்டியும் பாழாய்போன பசியும்!
நான் சகித்து சகித்து சம்பாதித்தவையெல்லாம்
அரை கிரெளண்டில் நிலமும் அதிலோர் வீடும்

வயதும், முகமும் வகுப்பும், படிப்பும்
சரியாய்த் தெரியாத குழந்தைகள் இரண்டு
சக்கரையும் அழுத்தமும் சரி விகிதத்தில்
வரவுக்ககாக வந்தோம் செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்மகன் எழுதினான்
"பத்தாம் வகுப்பு பெயில்"
நானும் எழுதினேன்
"பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்"

-சேக் அப்துல்லாஹ்.

கவிதை இறகு - ஆடி


சாலை குறித்த பூர்வாங்க விவாதம்

சமையல்கட்டிலிருந்து சாப்பாட்டுக்கூடத்துக்கு
புத்தகஅலமாரிக்கு பூஜைரூமிலிருந்து
ஒவ்வொரு வீட்டின் வாசலிலிருந்தும் மற்றொன்றுக்கு
இன்னும்
தெருவுக்கு
தெருக்களுக்கிடையில்
ஊருக்கும் மயானத்துக்கும்
மயானத்திலிருந்து சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தனித்தனியாய்
இந்த ஊருக்கும் அந்த பட்டணத்திற்கும்
கண்டங்களை இணைத்தும்கூட
கொடித்தடம் கோணவழி
ஒத்தயடிப்பாதை ஓடைக்கரை தங்கநாற்கர நெடுஞ்சாலையென்று
நீண்டுகிடக்கிற சாலைவசதி...

(இடைமறித்து)
அடீ செருப்பால,
அது என்னாடா பழையசோறு கெடாமப் பாத்துக்குற பிரிஜ்ஜா
இல்லே,படுத்துத்தூங்குற மெத்தையா...
சாலைங்கறது வசதி இல்ல...தேவை....

ஆமாமாம் தேவை.
மக்களின் கருத்தை மதித்து திருத்தம் ஏற்றுக்கொள்ளப்...

(மீண்டும் இடைமறித்து) மதிக்கவும் திருத்தவும் நீ யாருடா..
ஒழுங்கா பேசப்பழகு முதல்ல..

மகாஜனம் இப்படி குறுக்கிட்டால்
என் மனப்பாடம் மறந்துவிடும்

சரி... முழங்கு உன் பிரசங்கத்தை

அனேகப்பாதைகளிருந்தாலும்
குண்டுங்குழியுமற்றதொரு பாதையே நம்தேவை
ஆனால் அதற்கு ஜல்லியும் தாரும் வேண்டுமே

மக்கு மக்கு... ரெண்டையும் கலந்து அந்தரத்தில போடுவியா ரோடு...?
நிலம் வேணும்டா நிலம். அதாவது மண்...

ஆமாமாம், அடங்காம துருத்திக்கிட்டு எழும்புறதையெல்லாம்
அங்குலம் அங்குலமா உள்ளழுத்தி சமப்படுத்த
ஒரு ரோலரும் தேவை.

இத்தனையிருந்தாலும் போதாதப்பா அறிவாளி
காலில் சாக்கு கட்டிக்கொண்டு
ராவும்பகலும் தார்ச்சூட்டில் வேக எங்களாட்டம் ஆட்களும் தேவை.

- ஆதவன் தீட்சண்யா.