Wednesday, July 20, 2011

கவிதை இறகு - ஆடி


சாலை குறித்த பூர்வாங்க விவாதம்

சமையல்கட்டிலிருந்து சாப்பாட்டுக்கூடத்துக்கு
புத்தகஅலமாரிக்கு பூஜைரூமிலிருந்து
ஒவ்வொரு வீட்டின் வாசலிலிருந்தும் மற்றொன்றுக்கு
இன்னும்
தெருவுக்கு
தெருக்களுக்கிடையில்
ஊருக்கும் மயானத்துக்கும்
மயானத்திலிருந்து சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தனித்தனியாய்
இந்த ஊருக்கும் அந்த பட்டணத்திற்கும்
கண்டங்களை இணைத்தும்கூட
கொடித்தடம் கோணவழி
ஒத்தயடிப்பாதை ஓடைக்கரை தங்கநாற்கர நெடுஞ்சாலையென்று
நீண்டுகிடக்கிற சாலைவசதி...

(இடைமறித்து)
அடீ செருப்பால,
அது என்னாடா பழையசோறு கெடாமப் பாத்துக்குற பிரிஜ்ஜா
இல்லே,படுத்துத்தூங்குற மெத்தையா...
சாலைங்கறது வசதி இல்ல...தேவை....

ஆமாமாம் தேவை.
மக்களின் கருத்தை மதித்து திருத்தம் ஏற்றுக்கொள்ளப்...

(மீண்டும் இடைமறித்து) மதிக்கவும் திருத்தவும் நீ யாருடா..
ஒழுங்கா பேசப்பழகு முதல்ல..

மகாஜனம் இப்படி குறுக்கிட்டால்
என் மனப்பாடம் மறந்துவிடும்

சரி... முழங்கு உன் பிரசங்கத்தை

அனேகப்பாதைகளிருந்தாலும்
குண்டுங்குழியுமற்றதொரு பாதையே நம்தேவை
ஆனால் அதற்கு ஜல்லியும் தாரும் வேண்டுமே

மக்கு மக்கு... ரெண்டையும் கலந்து அந்தரத்தில போடுவியா ரோடு...?
நிலம் வேணும்டா நிலம். அதாவது மண்...

ஆமாமாம், அடங்காம துருத்திக்கிட்டு எழும்புறதையெல்லாம்
அங்குலம் அங்குலமா உள்ளழுத்தி சமப்படுத்த
ஒரு ரோலரும் தேவை.

இத்தனையிருந்தாலும் போதாதப்பா அறிவாளி
காலில் சாக்கு கட்டிக்கொண்டு
ராவும்பகலும் தார்ச்சூட்டில் வேக எங்களாட்டம் ஆட்களும் தேவை.

- ஆதவன் தீட்சண்யா.

No comments:

Post a Comment