இந்த மண் என்னைப் போன்றது
இந்த குளம் என்னுடையதல்ல ஆனால்
இந்த நீர் என்னைப் போன்றது
இந்த எல்லை வரையறைகளை
நான் மறுதலிக்கிறேன் ஆனால்
இந்த காற்று என்னைப் போன்றது
இக்கடிகாரமும் நாட்காடியும்
என்னுடையதல்ல
ஆனால் காலமும் பொழுதும்
என்னைப்போன்றது
இந்த வனத்தை நான் உரிமை கோருவதில்லை
ஆனால்
என்னைப் போலவே இவ்வனமும்
அடைகாக்கிறது கருத்தரிக்கிறது
உயிர்களைப் பதியனிடுகிறது
என்மீதானதைப் போலவே
இந்த மண்ணின் மீது
நீரின் மீது
காற்றின் மீது
காலத்தின் மீது
வனத்தின் மீது
நீங்கள் செலுத்துகிற அதிகாரத்தை
அடக்குமுறையை
ஒவ்வொரு அணுவிலும்
நான் எதிர்ப்பேன்
இது என்மொழி
உங்களது போராட்டமும் அதுதானென்றால்
உங்களுக்கும் புரியக்கூடும் அம்மொழி .....!
-செங்கவின்.