அம்மனும் அம்மாவும்
எங்களுக்கு மட்டும் என் இப்படிஎன்றால் ?
என்றாள் அம்மா.
எல்லாம் கிரகங்களின் சஞ்சாரம்மா
அஞ்சாறு மாசம் போனா சரியாயிடும் போ
வனதுர்க்கை கோயிலுக்கு அந்தியிலே
ஒரு மண்டலம் விளக்கு போடு
பிடிச்ச கஷ்டமெல்லாம் விலகிப்போகும்
என்றார் பூசாரி தாத்தா
குடும்பத்தின் துன்பமெல்லாம்
தொலைந்துடும் அம்மான் நம்பிக்கை
வயல்வெளியின் நடுவில்
ஒரு கோவில் அடையாளம் காட்டப்பட்டது.
அம்மன் ஆக்ரோசமானவளாச்சே
அங்க எதுக்கு?பயமும் அறிவுறுத்தப்பட்டது.
அம்மாவை தொடரும் நான்
என்னை தொடரும் பயம்
இரண்டு மைல் நடையில்
தினம் வரும் அந்தத் திறந்தவெளிக்கோவில்
ஒரு தீப்பெட்டி தீரும் வரை
தொடரும் விளக்கேற்றுதல்
காற்றை பொறுத்து
சில சமயம் அதுவும் தாண்டும்
திரிகள் வேராகும்
எண்ணெய் நீராகும்
விளக்கு சூரியன்
வெளிச்ச விதையாகும்
கறுப்பு நுனி பெற்றெடுத்த
நெருப்புக் குழந்தை
காற்றோடு போராடும்
கோயிலை சுற்றிய இருட்டு
என்னை மிரட்டும்
அங்கும் இங்கும்
அலையும் தீபம்
இப்படித்தான் நம் குடும்பமும்
அல்லாடுகிறது என்று
தீபம் நேராக எரியும்வரை
கைகூப்பி வேண்டுவாள் அம்மா
குடும்பத்துக்காய் போராடும் அம்மா
காற்றோடு போராடும் தீபம்
இதில் யாரை வணங்குவது ?
இன்றும் தொடர்கிறது
அம்மா மீதான பக்தியும் பக்தியும்
அம்மன் மீதான பயமும்?
-பாலா.
No comments:
Post a Comment