Friday, November 26, 2010

தணல் பூத்துக் கிடக்கிறதெனதுள்ளம்

பசுமை போர்வையிழந்து
சம்பல் கவிந்த
மேனிய ளாயுள்ளேன்
மாறிக் குளிரில் நனைந்திடினும்
தணல் பூத்துக் கிடக்கிறதெனதுள்ளம் .
துன்பத்துக்கும் துயரத்துக்கும் நடுவில்
உன்னை வாரியணைக்க முடியாத
தாயானேன் நான் .

ஒரு அழகிய காலையை
உனக்கு காட்ட முடியாத
வசந்த காலத்தில்
விளையாட முடியாத
பாலைவன நாட்களையே
உனக்கு பரிசளிக்கின்றேன் .
எந்த நேரமும் வீழ்ந்து வெடித்து
உயிர் குடிக்கும் எறிகணைக்குள்
முகில் கலைத்து வானிரையும்
எமதூதப் பறவைகளின்
வருகைகளிற் கிடையில்
துப்பாக்கி வெடியோசையின்
சப்தங்களுக்கிடையில்
எப்படி என்னால்
இனிமையை உனக்குத் தரமுடியும் .
என்னால் பரிசளிக்க முடியாத வாழ்வை
நீயே சென்றடைவாய்!
விழிகளில் சிவப்பும்
இறக்கைகளில் நெருப்பும்
உனக்கு சொந்தமாகட்டும் .
எம்மை வேகவைத்த காலம்
உன்னால் வேகிச் சாம்பலாகட்டும்
ஒரு புதிய வாழ்வு
உன் கரங்களிலே பிறக்கட்டும் .

- அம்புலி
.

Sunday, November 21, 2010

திரும்பியே வராத

பின் திரும்பியே வராத
பிள்ளையின் அம்மாவிற்கு
அவ்வப்போது காணநேரிடும்
பைத்தியக்காரர்களின்
பிளாட்பார மரணங்கள்
பின்னிரவு நெடுங்காய்ச்சலை
பரிசளிக்கின்றன.

-பா. திருச்செந்தாழை.

பிரிய மழை

பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்

அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்

வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை.

- யுகபாரதி.

கவிதை இறகு-கார்த்திகை


"என்ன செய்து கிழித்தார் பெரியார்?"
பனை ஏறும் தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை சேய்பவர் கேட்டார்.

"பெரியாரின்
முரட்டுத் தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க"
இது
முடிவெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

"என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிராமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?"

இப்படி 'இந்தியா டுடே' பாணியில்
கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே
டெலிபோன் டிபார்ட்மென்டில்
'சுபமங்களா'வை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சை
செய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

-வே. மதிமாறன் .

Friday, November 12, 2010

சந்தித்தல்

சந்திப்பதற்கென
ஒரு நாளின் மாலையைத் தேர்ந்தேன்
கொஞ்சம் கவிதைகள்
கனிவூட்டும் இன்னிசை
காதலின் சுவை கலந்த தேநீர்
வாசனை தந்து வரவேற்க மலர்கள்
எல்லாம் ஆயத்தமாக.
அழகிய மாலைகளும்
கடிகாரமும் யாருக்காயுங் காத்திருப்பதில்லை
மஞ்சள் மாலை மெதுவாய்க் கறுக்க
மணலிற் பரவும் நீரெனப் பரந்தது இரவு
நிகழாது போன வருகையும்
பகிரப்படாத கவிதைகளும்
சொல்லப்படாத காதலும்
பருகப்படாத தேநீரும் வாடும் பூக்களோடு
ஒவ்வொரு அழகிய மாலையிலும்
எங்கோ ஒரு வீட்டின் தோட்டத்தில் கைவிடப்படுகின்றன.

-வினோதினி.

Wednesday, November 3, 2010

காதலைக் காதல் என்றும் சொல்லலாம்

மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்

காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.

-பூமா ஈஸ்வரமூர்த்தி.
"காதலைக் காதல் என்றும் சொல்லலாம்"

கதவு

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
"யார்"
என்று கேட்டேன்
"நான் தான்
சுசீலா
கதவைத் திற"என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

-நகுலன்.

நீ வருவதென்பது

பழுத்ததாய்த் தேடி வந்தமர்கிறது
கிளி.
எதுவென்று கேட்க முடியாது.
காடெங்கும் பாம்புகள்.
சொல்லித் தீராத கதை
ஒன்றும் புரிவதாக இல்லை.
உயர உயர எழும்புகிறது
சுவர்.
உறைக்குள் மின்னுகிறது
வாள்.
கதிரவன் மறையும் நேரமிது.
இருள் சூழ்ந்து இமைமூட
நீ வருவதென்பது
வராமலேயே இருப்பதாகிறது.

-அழகுநிலா.

Monday, November 1, 2010

வரம்


நின்றிருக்கிறேன் நானும்
அவ்விடத்தில்
மரமில்லாதொரு பொழுதில்
என்றாலும்
என் மீதில் அமர்ந்ததில்லை ஒரு நாளும்
எந்தப் பறவையும்
-குகை.மா.புகழேந்தி.
ஆத்தா அடிச்சி
அஞ்சாறு மணி நேரமாச்சு
அதென்னமோ
சாயந்தரம்
அப்பனக் கண்டதும் தான்
விபரம் சொல்லி வலிக்குது
குழந்தைக்கு !
-சக்திகா.

கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொடுக்கின்ற கடவுள்
முதலில் எங்களுக்கு
கூரையைக் கொடுக்கட்டும்...!
- ஆதம்பாவா.
என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி.
-மு.சுயம்புலிங்கம்.
”நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்”

வரம்

நான் என்ன கேட்டேன்?
நீ என்ன தந்தாய்?
புரியாததெல்லாம் புரியக் கேட்டால்,
புரிந்ததெல்லாம் புரியாதுபோக வரம் தருகிறாய்!
-குவளைக்கண்ணன்.