Friday, November 26, 2010

தணல் பூத்துக் கிடக்கிறதெனதுள்ளம்

பசுமை போர்வையிழந்து
சம்பல் கவிந்த
மேனிய ளாயுள்ளேன்
மாறிக் குளிரில் நனைந்திடினும்
தணல் பூத்துக் கிடக்கிறதெனதுள்ளம் .
துன்பத்துக்கும் துயரத்துக்கும் நடுவில்
உன்னை வாரியணைக்க முடியாத
தாயானேன் நான் .

ஒரு அழகிய காலையை
உனக்கு காட்ட முடியாத
வசந்த காலத்தில்
விளையாட முடியாத
பாலைவன நாட்களையே
உனக்கு பரிசளிக்கின்றேன் .
எந்த நேரமும் வீழ்ந்து வெடித்து
உயிர் குடிக்கும் எறிகணைக்குள்
முகில் கலைத்து வானிரையும்
எமதூதப் பறவைகளின்
வருகைகளிற் கிடையில்
துப்பாக்கி வெடியோசையின்
சப்தங்களுக்கிடையில்
எப்படி என்னால்
இனிமையை உனக்குத் தரமுடியும் .
என்னால் பரிசளிக்க முடியாத வாழ்வை
நீயே சென்றடைவாய்!
விழிகளில் சிவப்பும்
இறக்கைகளில் நெருப்பும்
உனக்கு சொந்தமாகட்டும் .
எம்மை வேகவைத்த காலம்
உன்னால் வேகிச் சாம்பலாகட்டும்
ஒரு புதிய வாழ்வு
உன் கரங்களிலே பிறக்கட்டும் .

- அம்புலி
.

No comments:

Post a Comment