Sunday, February 28, 2010

ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி

அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்
அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்
அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்
அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்
மாடத்துத் தொட்டிச் செடிகளில்
குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்
ஜன்னல் திலைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்
வாசலில் நுழையும் வெயில்
அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்
கைகளைத் தூக்கி தூரப் போடுவது மாதிரி விளக்குவாள்
ஆத்திரப்படும் போது காலை ஓங்கித் தரையில் உதைப்பாள்
சுட்டு விரலால் காற்றில் எழுதுவாள் அழிப்பாள்
புரிந்து கொள்ளாத மாணவ மாணவிகளிடம் பொறுமையிழப்பாள்
பொட்டு வைப்பதைவிட மெதுவாகத் தான் என்றாலும்
தன் நெற்றியில் அடிக்கடி அடித்துக் கொள்வாள்
கன்னத்தில் ஒரு பலூன் ஊதிக் கடைவாயில் கடித்தபடி
யோசனையோடு குறுக்கும் மறுக்கும் நடப்பாள்
கெட்டிக்கார குழந்தைகளைப் பாராட்ட
புன்னகை வயலில் பூவொன்று பறித்துக் கொண்டு
சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்
ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி
திங்கட்கிழமையை தள்ளிக் கொண்டு போவாள் பள்ளிக்கு
-பிரான்சிஸ் கிருபா.

Saturday, February 27, 2010

அபிதா - லா.ச.ராமாமிருதம்.

"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை."
பொருள் :
"பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்கு சொல் .பிரிந்து சென்று விரைந்து வருதலைபற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்கு சொல் "

பிரிவாற்றாமை அதிகாரத்தில் வரும் முதல் குறள். தன் உண்மையான காதலை மறந்துவிட்டு ,காதலியிடம் சொல்லாமல் சென்ற ஒருவன் காலம் கடந்து தன் காதலியை தேடி வரும் கதையே "அபிதா" நாவலின் கதை.கால வேறுபாட்டில் அவன் சந்தித்த , சந்திக்கும் அனுபவங்களும், அதிர்ச்சிகளும் அதை சொல்லும் கதை நடையிலும் அபிதா சந்தேகமே இல்லாமல் காலம் கடந்தும் நிற்கும்.

லா.ச.ராமாமிருதம் அவர்களின் "அபிதா"விற்கு தமிழ் எழுத்தாளர்கள் எவர் சிறந்த புத்தகங்களை பற்றி பட்டியல் இட்டாலும் கண்டிப்பாக இடம் உண்டு.118 பக்க நாவல் படிக்க படிக்க பல்வேறு அர்த்தங்களை தந்துகொண்டே செல்கிறது ஒவ்வொரு பக்கத்திலும்.
1989 இல் சாகித்ய அகாடெமி விருது பெற்ற லா.ச.ரா வின் எழுத்து தனித்துவமானது.ஒரு தடவை படித்து முடித்த பிறகும் மறுமுறை படிக்க தூண்டுகின்ற எழுத்து நடை லா.ச.ரா வின் கதை சொல்லும் ஆற்றல்.படிக்கப்படிக்க வேறுவேறு அனுபவங்களையும்,அர்த்தங்களையும் தந்து வாசகனை அபிதா விற்கு உள்ளயே கட்டிப்போட்டுவிடுகின்றன.

கண்டதே காக்ஷி
கொண்டதே கோலம்
வந்ததே லாபம்
இன்று இப்படி போச்சா?
நாளை என்னவாகுமோ?
என் நேரத்தை காசாக எண்ணி எண்ணிக் கழித்த அந்நாளில்
"அதோ அந்த வீட்டில் இன்று சமாராதனை"
"இந்த கோயிலில் உச்சி வேலைக்கு உண்டைக் கட்டி"
என்று எனக்கு கைஜாடையாகவே வயிற்றுக்கு வழி காட்டியவன் எவனாயினும் அவன் என்
வயது ஏற்ப என் அண்ணனோ தம்பியோ; தாகத்துக்கு தவிக்கையில் ஏந்திய கையில் கிண்டி மூக்குவழியோ குடத்து வாய்வழியோ ஜலம் வார்தவள் என் தங்கையோ ,தாயோ.


அம்பி நீ நாலு நாளைக்குத் திகைப் பூண்டு மிதிச்ச மாதிரி ஊமைகாயம் பட்டமாதிரி, வாயடைசிப் போய்க் கண்ணாலே என்னை தேடித்தேடி தவிச்சிடுப் போனியே! எனக்கு மறைப்பு கட்டியிருந்த ஓலைத் தடுக்கின் பின்னாலிருந்து பார்த்தேன்; உன்னைப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பா வந்தது.ஒரு பக்கம் பரிதாபமாயிருந்தது.ஆனால், அதுக்கபுறம் எனக்கே ஏக்கம் பிடிச்சுப்போச்சு அம்பி.அம்மா சட்ட திட்டம் பண்ணிப்பிட்டா. 'நீ இனிமேல் யாரோடும் இஷ்டப்படி பேசிண்டு கூதடிக்கப்படாது.உன் இஷ்டத்துக்கு கூடத்திற்கு வாசலிலே வந்து நிக்கப்படாது.'ன்னு திடிர்த்திடிர்னு ,நினைக்காத சமயத்தில் ,எதிர்பாரத இடத்தில , எதிரே,பின்னால் இருந்து,பக்கதிலிருந்து அம்மா புதையல் காக்கும் பூதம் போல் முளைகறப்போ 'பகீர் பகீர்'னு வயத்தை சுருட்டுறது. குத்தமில்லாத இடத்தில என்ன குத்தம் பண்ணினேன்னு சதா திகில்; வீடு ஜெயிலாயிடுத்து. வீடென்ன, இந்த பரந்த பூமியையே அம்மா சுவரை போட்டு வளசுப்பிட்டாள். என்னவோ பாதி புரிஞ்சதும் புரியாததுமா ஏதோ சொல்றா;

'தாத்தா சொல்வார்: ' உன் அம்மா கண்ணிராவே கரைஞ்சு போயிட்டா'னு.
'தாத்தவை நன்னா நினைவிருக்கு .திண்ணையில்தான் எப்பவும் வாசம்.தாத்தாவுக்கு கண் தெரியாது .தலையை தடவி என்னை தெரிஞ்சுப்பார்.கதையெல்லாம் நல்லா சொல்லுவார்.'இப்போ என் கைதான் அம்மா,என் கண்' என்பார்.'வாலு போச்சு கத்தி வந்தது டம்டம்;குரங்குக்கு ஒண்ணு போனால் ஒண்ணு வந்தது டம்டம்.உன் தாத்தாவுக்கு
கண்ணு போச்சு பொண்ணு போச்சு எல்லாம் போச்சு உசிர் போகலே டம்டம்'னு ஏதோ சிரிப்பு வர மாதிரி சொல்லி முடிப்பார்.சிரிப்பு கேக்காமல் வந்துடும்.சிரிச்சப்புறம் சிரிச்சது தப்புன்னு தெரிஞ்சு பயமாயிருக்கும்.ஆனால் ஏன் தப்புன்னு தெரியாது.

'ஒரொரு சமயம் கண்ணிலிருந்து சதையை உரிச்சாப் போல்,கண்ணே திடிர்னு தெரிஞ்சுட்டாப் போல் ஒரு திக்கா முறைச்சு பார்திண்டிருப்பார்.அப்படி என்னத்தை பார்க்கறார்னு அந்தப் பக்கம் திரும்பி பார்ப்பேன்.எனக்கு ஒன்னும் தெரியாது.ஆனால்,அவருக்கு மாத்திரம் ஏதோ தெரியும்போல இருக்கு.இப்போ தெரியறது என்பார். திரும்பவும் அந்தத் திசையைப் பார்பேன் .அங்கு ஒண்ணுமில்லை.

'என்னது தாத்தா?'
'இப்போ புரியறது'
'எது தாத்தா?'
'ஏன் அப்படிக் கண்ணீரா உருகி,காற்றில் கற்பூரமா காணாமலே போயிட்டான்னு.'
'ஏன் தாத்தா?'

'ஆனால் ,இப்போ புரிஞ்சு பிரயோஜனம்? புரிஞ்சதை சொல்லித்தான் பிரயோஜனம்? அப்பவே புரிஞ்சிருந்தாலும் அதனால் நடக்கப்போற காரியமும் இல்லை.ரகளைதான் கூட.நன்னா புரியறது.புரியறதுக்கு மேல 'ப்ரூவ்'ஆறது;கிட்டி முட்டிப்போனால் யாருக்கு யார் ? நீ யாரோ நான் யாரோ ,யார் யாரோ ஆரரிரோ ...ன்'னு கட்டை குரல்லில் தாலாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவார்.


'என்ன தாத்தா பாடறேள்!ஒன்னுமே புரியலியே!'
'எல்லா கேள்விக்கும் ஒரே பதில் ,ஒரே பதில்தான்.ஒரே கேள்வி, கேள்வியேதான் பதில் -ஆரரிரோ ஆரரிரோ-'
'திடிர்னு தாத்தா சிரிப்பார் .சிரிப்பு புரியாது ;ஆனால் அதன் வேதனை மட்டும் எனக்கு அப்பவே புரியும் -ஏன் மாமா உங்கள் கண்ணில் திரை மறைக்கிறது?'

வெட்கமற்ற கண்ணீர்- அல்ல,வெட்கம் நிறைந்ததா என் கன்னங்களில் வழிகின்றது.ஆயினும் என் குரல் மட்டும் கண்ணீரில் குளித்ததாய் , சுத்தமாய், தெளிவாய் ஒலிக்கின்றது.

உன்கதை நீ சொல்கிறாய்.புஷ்பம் மலர்வது போல்,அர்த்தங்கள் ஆயிரம் இதழ்கள் என்னில் தளையவிழ்கின்றன.ஆனால்,உன் தாத்தா சொன்னாற்ப்போல்-பிரயோஜனம்?

குறைந்தபட்சம்,அதிகபட்சம் என்ற வரையறைக்குள் அபிதாவை படிக்கும் மறு எண்ணிக்கை அடங்குவதில்லை.

விலை-75 ,பக்கங்கள் -118
கிடைக்குமிடம்-
கிழக்கு பதிப்பகம்
no 33 /15 -எல்டாம்ஸ் ரோடு ,
ஆழ்வார்பேட்டை.
சென்னை-18 .
phone - 044 -42009601

Thursday, February 25, 2010

காதலை கொல்லும் தேவை

இருவரும் விடைபெறுவோம்
பிரிவிற்காக ஒருவரிடமிருந்துஒருவர்
பிடுங்கியெடுத்த ஆதி காதலை
துர்ச்சகுணம் சூழும் இவ்விருளின்
குழிகளில் போட்டுப் புதைப்போம்

காதுகளுக்குள் குசுகுசுத்த
உன் குரலின் இனிய ரகசியங்களை
சிரிப்பை
வானத்தில் எறிந்து விட்டேன்

எஞ்சியுள்ள உனது பாடல்களை
ஸ்பரிசங்களை
மெல்லிய நுரை முட்டைகளாக
கானல் வெளியில்
மிதக்க விட்டிருக்கிறேன்
அடுப்புச் சாம்பலுக்குள் ஒளித்தாயிற்று
உடைத்த நினைவுச் சின்னங்களை

முதல் முதல் நீ தந்த கவிதையை
ஒரு பகலுணவாகச் சாப்பிட்டாகிவிட்டது
‘’எதுவுமில்லை அடையாளங்கள்’’
பாவனைகளோடு கொஞ்சிய முத்தம்
கண்களாகவும்
பெயர் சொல்லி அழைத்த கணங்கள்
நிறங்களாகவும் கொண்டொரு வண்ணத்துப் பூச்சி
நினைவெல்லாம் பறந்து திரிவதை
எப்படிக் கொல்வது
எனக்குச் சொல்லித் தா
- அனார்.

காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.
-ஆத்மாநாம்.

இருத்தல்

வெகுநாள் கழித்து
பக்கம் புரட்டியதில்
தன்னை நினைவூட்டியது
மயிலிறகு

எதன் பொருட்டேனும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்
அழகாயிருக்கிறதென்றோ..
சில நினைவுகளுக்காகவோ..
அல்லது
குட்டி போடும் என்றோ..

இப்போது,
இறகு தொலைத்த அப்பறவையுமில்லை
நீயுமில்லை
- சகாராதென்றல்

புத்தகம்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன

நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை இதோ உண்மையான உயிர்மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.
-கவிஞர் கலாப்ரியா.

Friday, February 12, 2010

தொக்கி நிற்கும் கேள்விகள்

சோகங்களின் சுமை கூடும்போது
புல்லாங்குழலிசை கேட்பாயா
பூச்செடிகளுக்கு நீருற்றுவாயா?

கடிதத்தில் சில இடங்கள்
கலங்கியிருந்தனவே அழுதாயா?

வடுக்களில் சூடுபட்டால்
வலிக்குமா முன்போல்?

எப்போது பழகப்போகிறது மனம்
ஆளில்லாத வீட்டின் பூட்டை
இழுத்துப் பார்க்காமல் திரும்புவதற்கு.

இப்போதும்
திரும்பிப் பார்க்கிறாயா
என் பெயர் சொல்லி
பிறர் அழைத்தால்...

கண்ணில் படாமல்
இருந்திருக்கக் கூடாதா
புயலில் இறந்தோர் பட்டியலில்
உன் சாயல் புகைப்படம்.

நீ வரும் நாளில்
எப்போதும் போல்
வாசல் திறந்திருக்கும்
நான் இருப்பேனா
எதிர்கொண்டு வரவேற்க...

நேற்று பெய்த மழையில்
நனைந்தாயா?
எனக்கு ஜலதோஷம்.

சொல்ல மறந்த
பிறந்தநாள் வாழ்த்தைவிட
சுமையானதா...
வெளிசொல்லாத நேசம்?

அஞ்சல் நிலையத்திலும்
தெரிவிக்க வில்லையா?
உன் முகவரி மாற்றத்தை...

பிளாஸ்டிக் பூவைச் சுற்றிய
வண்ணத்துப் பூச்சி
உன் அன்புக்கு ஏங்கிய நான்
அதிகம் ஏமாந்தது யார்?

குமுறல்களை
அதிகம் பகிர்ந்துகொள்வது
தலையணையா
கவிதைகளா..?

எடைக்குப் போயிருக்குமோ..?
பரண் மேல் கிடந்த
பழைய புத்தகத்தோடு
ஸ்டிக்கர் பொட்டும் ரோஜாவும்...
-துறையூர் மணி.

சாமி செய்வது தப்பில்லையா

நெருப்பு ஏன் சுடுகிறது

சுடக்கூடாது என்று அதற்கு யாரும்
ஏன் சொல்லித் தரவில்லை

கடல் உப்புக் கரிக்கிறது
மீன் ஏன் கரிப்பதில்லை

தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்
சரி சாமி செய்வது தப்பில்லையா

குழந்தைகள் பேசிப் பேசி
பெரியவர்கள் ஆகிறார்கள்
-ரமேஷ் பிரேம்.

கவிதை இறகு -மாசி

நிகழ்விடம் சென்று
அமர்ந்தாயா?
காட்சிகள் கண்டு
களித்தாயா?
அமைதியாய் இருந்து
வந்தாயா?
இல்லையென்றால்
நீ
அங்கில்லை
ஆம் என்றால்
நான் இங்கில்லை.

-ஆனந்தி
"தானாய் கழிந்தது பொழுது"

Wednesday, February 10, 2010

மின்மினிகளால் ஒரு கடிதம்

எரிவதில் உள்ள
சுகம்
விட்டிலுக்குத்தான் தெரியும்
எனக்குத் தெரியும்
உன்னைக் காதலிப்பதென்பது
என்னைச் சிலுவையில்
அறைந்துகொள்வதாகும்
ஞாபகங்கள்
உனக்கு ஒற்றடை
எனக்கு வீடு
வா, மறதியின் இருட்டில்
ரகசியமாய் சந்திப்போம்
உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்மறைக்கிறேன்
மேகமாகி
உன்னைப் பிரிவதும்
நதியாகி
உன்னைத் தேடி வருவதும்
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
நீ என்
சூரியனுக்கும் மலர்வதில்லை
சந்திரனுக்கும் மலர்வதில்லை
நீ ஒரு வாழைப் பூ
-கவிக்கோ அப்துல் ரகுமான்.

Tuesday, February 9, 2010

திறக்கப்படாத கதவின் முன்

திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச் செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்
-இளங்கோ கிருஷ்ணன்.

Tuesday, February 2, 2010

உங்க மனசாட்சிய கொல்லலையா?

வன்னி முகாம் ஓரத்தில
முள்ளுக் கம்பி கக்கத்துல
ஏங்கி நிக்கும் பிஞ்சு முகம்
உங்க மனசாட்சிய கொல்லலையா?

ரெண்டு பக்கம் துப்பாக்கி
நடுத் தெருவுல நிப்பாட்டி
வெந்த சோறு திங்கச் சொன்னா
நெஞ்சுக் கூடு தாங்கிடுமா?

முள்ளுக் கம்பி நடுவினிலே
கொஞ்சம் நாள் வாழ்ந்திடுங்க
அவங்க வெச்ச கன்னி வெடி
சாகாம நிக்குதுன்னு சொன்னிகளே

கன்னி வெடி வாழுமிடம்
நஞ்சு குஞ்சும் அறிஞ்சிடுமே
இருபத் தஞ்சு வருச கால
வாழ்க்கை யெல்லாம் இங்கேதான்!
துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
ஊஞ்சல் கட்டி ஆடுமிடம்
ஊருணிக்கர மீன் குஞ்சு எல்லமே
நாங்க இல்லாம தேடிடுமே!

வயது வந்த செல்லமக
அவசரமா ஒதுங்கி நிக்க
இருட்டும் வரை காத்திருந்தா - அவ
அடி வயிறு தாங்கிடுமா?
மாற்றம் வரும் என்று
வட்ட முரசறைந்து சொன்னிங்களே
மாற்றம் ஏதும் இங்க இல்ல
மக்க மனசொடஞ்சு போனோமே?

நேற்று தடுத்தாண்டு கொண்டிகளே
கையில் தட்டேந்த வச்சிகளே
தம்பி தங்கை தொலைத்த நாங்கள்
சொந்த வீடு போவதெப்போ?

அழிஞ்ச சனம் மீதம்போக
மிஞ்சி வாழும் எங்கசனம்
சொந்த மண்ணில் உயிர் போக
சாவு பிச்ச கேட்குறோமே?!!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

பிழை திருத்தம்

பிழை திருத்தம்

தொல்காப்பியத்தில்
பிழை திருத்தம்
திணைகள் ஆறு
கொய்தல் திணை
முள்ளும்... முள்வேலிசார்ந்த இடமும்.

புறநானூற்றில்
பிழைதிருத்தம்
‘யாதும் ஊரே’
சிங்களம் தவிர...
‘யாவரும் கேளிர்’
சிங்களனைத்தவிர...

இந்திய விடுதலைப்போருக்கும்
ஈழ விடுதலைப்போருக்கும்
சிறு வேறுபாடுதான்
இந்திய விடுதலைப்போரில்
தமிழன் இந்தியனாகி மடிந்தான்
ஈழப்போரினால்
இந்தியன் தமிழனாக மலர்ந்தான்.

-அய்யாறு ச.புகழேந்தி.