Tuesday, February 2, 2010

உங்க மனசாட்சிய கொல்லலையா?

வன்னி முகாம் ஓரத்தில
முள்ளுக் கம்பி கக்கத்துல
ஏங்கி நிக்கும் பிஞ்சு முகம்
உங்க மனசாட்சிய கொல்லலையா?

ரெண்டு பக்கம் துப்பாக்கி
நடுத் தெருவுல நிப்பாட்டி
வெந்த சோறு திங்கச் சொன்னா
நெஞ்சுக் கூடு தாங்கிடுமா?

முள்ளுக் கம்பி நடுவினிலே
கொஞ்சம் நாள் வாழ்ந்திடுங்க
அவங்க வெச்ச கன்னி வெடி
சாகாம நிக்குதுன்னு சொன்னிகளே

கன்னி வெடி வாழுமிடம்
நஞ்சு குஞ்சும் அறிஞ்சிடுமே
இருபத் தஞ்சு வருச கால
வாழ்க்கை யெல்லாம் இங்கேதான்!
துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
ஊஞ்சல் கட்டி ஆடுமிடம்
ஊருணிக்கர மீன் குஞ்சு எல்லமே
நாங்க இல்லாம தேடிடுமே!

வயது வந்த செல்லமக
அவசரமா ஒதுங்கி நிக்க
இருட்டும் வரை காத்திருந்தா - அவ
அடி வயிறு தாங்கிடுமா?
மாற்றம் வரும் என்று
வட்ட முரசறைந்து சொன்னிங்களே
மாற்றம் ஏதும் இங்க இல்ல
மக்க மனசொடஞ்சு போனோமே?

நேற்று தடுத்தாண்டு கொண்டிகளே
கையில் தட்டேந்த வச்சிகளே
தம்பி தங்கை தொலைத்த நாங்கள்
சொந்த வீடு போவதெப்போ?

அழிஞ்ச சனம் மீதம்போக
மிஞ்சி வாழும் எங்கசனம்
சொந்த மண்ணில் உயிர் போக
சாவு பிச்ச கேட்குறோமே?!!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

No comments:

Post a Comment