Wednesday, July 31, 2013

கவிதை இறகு- ஆடி

உன் மனது 
எத்தனை பெரிய மலர்

உன் மனது 
எத்தனை பெரிய அகல் 

உன் மனது
எத்தனை பெரிய கோட்டை

உன் மனது
எத்தனை பெரிய புதிர்

எல்லாம் சொல்கிறது
நீயிடும் மாக்கோலம் !


-விஞர் மகுடேஸ்வரன்.

Wednesday, July 24, 2013

அவன் அவள்

அவளுக்குத் தெரியும் அவனை. 
திரும்பத்திரும்பத் தேடி வருவான். 
அந்த அளவுக்கு அடிமைப்பட்டிருந்தான். 
அவள் இல்லாமல் உயிர்தரித்திருக்க இயலாது. 
அவள் கன்யாகுமரி அம்மன் போலத் தனித்திருக்கக்

கூடியவள். 
இவ்வளவு காலமும் நடந்தது விளையாட்டு. 
இனி நடக்கவிருப்பது வினை. 
விளையாட்டிலேயே ஜெயிக்கத் தெரியாதவன் 
வினைக்கு என்ன ஆவான். 


-விக்ரமாதித்யன் நம்பி.

Friday, July 19, 2013

காதலாய்


அன்பை வார்த்தைகளில் 
சொல்வதை விட 
மிக இலகுவான செயல் எதுவுமில்லை..

அன்பை எழுத்துக்களில் 
பதிய வைப்பதை போல 
மிக துயரமான கவிதை எதுவுமில்லை..

அன்பை புரிந்து கொள்ள 
மறுப்பது போல 
மிக மோசமான வலி எதுவுமில்லை..

அன்பை தயவு தாட்சண்யமின்றி 
மறுதலிப்பது போல 
ஒரு பெருஞ்சோகம் எதுவுமில்லை.. 

அன்பை அது எவ்வளவு ஆழமாயினும் 
புறக்கணிப்பது போல 
மிகக் கொடிய வேதனை வேறெதுவுமில்லை.. 
-இவள் பாரதி.


என் வீட்டின் மல்லிகைச் செடியில்
பூத்திருக்கும் பூக்கள் பற்றியோ…
ரோஜா செடியில் பூத்திருக்கும்
ரோஜாக்களைப் பற்றியோ..
முருங்கை மரத்தில் வால் வாலாய்
தொங்கும் முருங்கை காய் பற்றியோ..
நெல்லி மரத்தில் கொத்துக் கொத்தாய்
ஒட்டியிருக்கும் நெல்லிக்கனிகள் பற்றியோ..
கொய்யா மரத்தில் பூக்கள்
விட்டிருப்பது பற்றியோ…
உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது?
அதைப் பற்றியெல்லாம் நம்
திருமணத்திற்கு பிற்பாடு ஆற அமர
பேசிக் கொள்ளலாம்….
முதலாக என்னை காதல் செய்!
-வா.மு.கோமு .

உன் கனத்த கதவுகளை 
அகலத் திறந்துகொண்டு 
இருண்ட காலங்களில் 
வெளிச்சமாய் வருவேன் நான் 
எனினும்...
எனக்காக காத்திராதே.
-மணிபாரதி துறையூர்.

இந்த இரவையே
உனக்கு
கடிதமாக அனுப்புகிறேன்
அஞ்சல்தலையாய்
அந்த நிலா!
-பழனிபாரதி.

நமது முதல் சந்திப்பில்
நீ எனக்காக செய்த புன்னகைக்கும்
அப்போதே தெருவில் எவனோ உரைத்த
அசரீரிக் குரலான
”சாவுடா மவனே”வுக்கும்
என்ன தொடர்பிருக்குமென்று
யோசித்துக் கொண்டிருக்கும்போதே
சுவாசம் திணறத் துவங்கிவிட்டது!
-குகை.மா.புகழேந்தி.  

யாருமில்லாத அறைகளிலெல்லாம்
காதலை
காதலிக்க முடியாது
எல்லோரும் பார்க்கமுடிகிற
பௌர்ணமி நிலவைப் போல
பகிரங்கமாக காதலி
அதற்குப் பெயர்தான்
காதல்!
-குகை.மா.புகழேந்தி.  

பயம்


நீச்சல் தெரியாது இருவருக்கும்
என்ற உணர்வு
படகுப் பயணத்தின் மகிழ்ச்சியில்
பொத்தலிட்டுக் கொண்டிருந்தது.
துடுப்புகளின் ஓய்வற்ற துளாவலில்
தண்ணீரின் உறைந்த தகடுகள்
உடைந்து விழுந்தன.
வட்டமடிக்கிற ஏரியின்
குளிர்விளிம்பில்
அமிழ்ந்து நீர் அள்ளிய 
விரல் மரத்துப் போனாலும்
அல்லிப்பூ 
பறித்தெடுத்த பரவசத்தில்
பனியுடன் அப்பால்
நகர்ந்து விட்டிருந்தது 
பயம்.
அனைவரும் பார்க்க
முத்தமிட்டுக் கொள்ளவும்
முடியலாம் இனிமேல்.

-கல்யாண்ஜி.

ஒரு மரத்தின் பெருவாழ்வு


எங்கோ வளர்ந்த மரங்கள்
நமக்கான கனிகளை அனுப்பிக்கொண்டிருப்பது
பக்கத்திலிருக்கும் மரங்களை
பாதுகாப்போம் என்கிற நம்பிக்கையில்தான் .




முதல் இலையின் துளிர்த்தலுக்கும்
கடைசி இலையின் உதிர்தலுக்குமிடையிலிருக்கிறது
ஒரு மரத்தின் பெருவாழ்வு .




இலைகளற்ற தனிமையை
கடப்பதுதான்
மரங்களுக்கும் பெரும்பாடு .




இரைதேடிச் சென்ற பறவை
கூடு திரும்பும்வரை
குஞ்சுகளைத் தாலாட்டும் மரக்கிளை .




காடு
என்கிற சொல்லுக்குள்
எத்தனையெத்தனை மரங்கள் .




எல்லாவற்றையும்
கொடுத்துவிடுகின்றன மரங்கள்
பிறகும் கொலை செய்கிறோம்.




மரங்களிடமிருந்து விடைபெற மனசின்றி
வீட்டிற்குத் திரும்பினேன்
சட்டைப்பையிலிருந்தது ஓர் இலை.


-குகை மா.புகழேந்தி

Saturday, July 13, 2013

கவிதை இறகு - ஆனி

முகம் பூத்த நிறங்கள்
கோடைக்குப் பின்னான 
முதல் துளிர்ப்பின் தயக்கத்தில் 
வரையத் தொடங்கினாள் சிறுமி 
தன் வளையலால் வட்டத்தை 
அருகமர்த்திய இரு மலைகளிடையே 
மற்றொருத்தி சூரியனை திணித்துக்கொண்டிருந்தாள் 
மேலும் சிலரோ 
கட்டங்களில் வீட்டையும் 
ந-இட்டு காகத்தையும் 
எப்படியேனும் 
சுதந்திரக்கொடியை பறக்கவைத்துவிட கம்பத்தையும் 
ஐந்தில் நாயையும் வரைந்து 
காய்ந்த ஜவ்வரிசிக் கஞ்சியை 
உடைத்துடைத்து ஒட்டி 
பூசிய நிறங்களால் 
பளிங்குச் சிலையென தகதகக்க 
திருப்தியின் கீற்றுகள் வழிந்தன 
முகமெங்கும் வர்ணங்களாக...
-ந.பெரியசாமி.

சாபம் அய்யா


கண்மணி குணசேகரன் கடிதம் எழுதியிருந்தார்.
'மணக்கொல்லைக்கு' அழைத்திருந்தார்.

ஒரு முற்பகலில்
ஊரைச் சுற்றிக் காட்டினார்.

ரெட்டியார் கிராமம்.
பத்து பன்னிரெண்டு போலத்
தோட்டமும் வீடுமாகப் பெரிய ஓட்டு வீடுகள்.
இடையிடையே சில இடிந்து கிடந்தன.
எருக்கு முளைத்திருந்தது.

"சாபம் அய்யா-
கழுத விழுந்து பொரளணும்!
குடியத்துப் போவணும்!"

டு இந்த வீடு இன்னு
சில ரெட்டியாருங்க வந்து கும்புடுவாங்க.
இங்க நின்ன இதான் பறவீரன் கோயில்.
அது பறவீரன் குளம்.
அந்த வீஒரு அழிஞ்சி மரத்துலதான்
தல கீழா தொங்கவுட்டு
வைக்கோலப் போட்டு கொளுத்துனாங்களாம்

இதான் அந்த நெலம்
அந்தப் பஞ்சத்துலயும் இந்தக் கொல்லையில
அப்புடி கம்பு வெளஞ்சிருந்துதாம்.
தோ, புலியூரு
அந்தப் பக்கத்துல இருந்து வந்துதான்
ஒரு ராத்திரி கம்ப அறுத்துட்டானாம்

கேள்விப் பட்டு வந்த அவன் பொண்டாட்டி
நெறமாத கர்ப்பிணி-
'பசிக்குத் திருட வந்தவன,இப்புடி
பண்ணிப்புட்டீங்களேடா பாவிவோளா'ன்னு
மண்ண வாரிவுட்டு அழுது பெரண்டாளாம்.

அப்ப,
அப்ப அடிச்சி உட்டுடலாமுன்னு தடுத்துவுங்க குடும்பங்க
இப்ப வித்து மாறிகிட்டிருக்குது
கொளுத்னவனுவோ வீடுங்க
எருக்கு மொளச்சி கெடக்குது"

நின்று நினைத்தேன்:
கோயில், அடையாளம் என்று நின்ற வேல்,
நாவாக அசைந்து சொன்னது.
'பறையன்,
பறையனா இருந்தா கொளுத்துவானுங்க.
வேரறுக்கும் 
வீரனா இருந்தா கும்புடுவானுங்க'.

-பழமலய் 

முயற்சி


சறுக்கல் விளையாட
ஆசைப்பட்டான்.
‘சார்
ஏறி, ஏறி
சறுக்கப் போகிறேன்''
‘மாற்றிச் சொல் குழந்தாய்
சறுக்கச் சறுக்க
ஏறப் போகிறேன்.''
சறுக்கல் இயற்கை
ஏறுதலே முயற்சி.

-பழ.புகழேந்தி