எங்கோ வளர்ந்த மரங்கள்
நமக்கான கனிகளை அனுப்பிக்கொண்டிருப்பது
பக்கத்திலிருக்கும் மரங்களை
பாதுகாப்போம் என்கிற நம்பிக்கையில்தான் .
முதல் இலையின் துளிர்த்தலுக்கும்
கடைசி இலையின் உதிர்தலுக்குமிடையிலிருக்கிறது
ஒரு மரத்தின் பெருவாழ்வு .
இலைகளற்ற தனிமையை
கடப்பதுதான்
மரங்களுக்கும் பெரும்பாடு .
இரைதேடிச் சென்ற பறவை
கூடு திரும்பும்வரை
குஞ்சுகளைத் தாலாட்டும் மரக்கிளை .
காடு
என்கிற சொல்லுக்குள்
எத்தனையெத்தனை மரங்கள் .
எல்லாவற்றையும்
கொடுத்துவிடுகின்றன மரங்கள்
பிறகும் கொலை செய்கிறோம்.
மரங்களிடமிருந்து விடைபெற மனசின்றி
வீட்டிற்குத் திரும்பினேன்
சட்டைப்பையிலிருந்தது ஓர் இலை.
-குகை மா.புகழேந்தி
No comments:
Post a Comment