Saturday, October 22, 2011

கவிதை இறகு - ஐப்பசி

நெசமாத்தானுங்களாண்ணா?

காற்றின் பெருவெளிகளில்
தென்னைகளை அழித்த
இறுமாப்பில் சுழலும்
அசுர காற்றாலைக் கரங்கள்
புல் தேடி அலையும்
கால்நடைகளின் வாய்களில்
படர்கின்றன பாலீதீன் அரக்கர்கள்
வீடுகளில் வலைகளுக்கு
பின்னாலிருக்க கற்றுக் கொண்டு
கொடுக்கப்படும் இரைகளை
உண்டு உறங்க பழகி
பல வருடங்களாகிவிட்டன

குருவிகளுக்கு
மரங்களை பார்க்கவென்று
சிறப்பு சுற்றுலா திட்டம்
செயல்படுத்தப்படுகிறது
ஒவ்வொரு பள்ளியிலும்
ஓசோனின் ஆயுளுக்காக
வருடத்தில் ஒருமுறை
ஒருமணி நேர மின்சார நிறுத்தமாம்
உலகெங்கும்
மரபணு விதைகளும்,இறக்குமதி உரங்களும்
மண்ணின் உயிரை உறிஞ்சியபடி
படிகளற்ற கிணறுகளில்
பாகம் பிரித்துக்கிடக்கின்றன
ஆழ்துளைக் கிணறுக் குழிகள்
வறண்டு கிடக்கும் வாய்க்கால்களில்
வலை பின்னி கிடக்கும் சிலந்திகள்.
ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகின்றன
தள்ளுவண்டிகளில்
கேழ்வரகு, கம்பங்கூழ்கள்
தொலைக்காட்சி தொடர்களின்
நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன
விவசாயப் பணிகள்.
மனைகள் பிரித்தது போக
மீதிக் கிடக்கும்
மேட்டுக்காட்டுக் குடிசையில்
பிளந்து கிடக்கும்
மாட்டுவண்டி சக்கர
கோணல் அச்சாணிக் கம்பிகளில்
கிழிந்து தொங்குகிறது
விவசாயிகளின் இற்றுப்போன கோவணத்துணிகள்
ஊடகங்களிலும் புத்தகங்களிலும்
அடிக்கடி தட்டுப்படும் வார்த்தை!
"இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு
விவசாயம்"

- ஜெ.பாலா.

Tuesday, October 11, 2011

இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...

சந்திப்பின் முடிவில்
பசுமையினிழைகளோடும்
வெண்பட்டுக் கூம்பென
விரிந்திராத மொட்டினைக்
கொடுத்துப் போகிறாய்
குழந்தையின் முறுவலுடன்..

அல்லியை விடவும்
அழகாயிருக்கிறது
அதன் தண்டு...
ஈரம் பொதிந்ததாய்..
இதழினும் பளபளப்பாய் ..
இதயத்தில் பதியனிட ஏதுவாய்....

தாயின் இடுப்பினின்று
தரையிறங்க நழுவுமோர்
மழலையின் துள்ளலுடன்
மலர்த்தண்டினின்று
மண்நோக்கி வீழ்கின்றன
நீர்த்துளிகளுடன் சில
கவிதைகளும்..

விடியலின் மின்தடைக்கு
விழி திறக்கையில்
எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் கீழ்
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லித்தாளுக்கு...

ஒப்புமையின் உக்கிரம் தாளாது
உள்ளத்தின் பதியன்களை
அழுகையடக்கி அறுத்தெறிகையில்
அடித்தண்டில் சேறென
அப்பிக்கிடக்கும் வலியை
அகற்றும் திறனில்லை
எனக்கு.

- கௌரிப்ரியா.