skip to main |
skip to sidebar
நான் பார்க்கும்
இடங்களில்லாம்
நீ இருக்கின்றாய்,
நான் கேட்கும்
ஒலிகளிலெல்லாம்
நீ சிரிக்கின்றாய்.
என் இரவில் நிலவாகவும்
என் கவிதை கனவாகவும்
இருக்கின்றாய்.
சமயங்களில்
நானாகவும்
இருக்கின்றாய்.
இப்படி
எல்லாமுமாக நீ
இருப்பதால்தான்
நான்
நானாகவே
இருப்பதில்லை
- கவிதா இராமகிருஷ்ணன்.
உன்னுடைய வட்டமும்,
என்னுடைய வட்டமும்
ஒன்றாகக் கலந்து விட்டாலும்
நாமிருவரும்
இன்னும்
தனித்தனிதான்
அறிமுகங்களில்
என்ன
நிகழ்ந்து விடப் போகிறது?
சமாதானப் படுத்திக்
கொள்வோம்.
- சங்கரி.
தன் தலைமுடியைத்
தானே பற்றிக்கொண்டு
விடுவிக்கும் உபாயம்
அறியாமல்
வீறிட்டு அழும்
சிசுவைப் போல்
உன் நினைவுகளில் நானும்
-தனலெட்சுமி பாஸ்கரன்
விதி
நடந்தே அழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி
- வல்லிக்கண்ணன்.
மழை - கமலா தாஸ் கவிதை
களையிழந்த அப்பழைய வீட்டைவிட்டு வந்துவிட்டோம்
நான் வளர்த்த நாய் அங்கு மரித்துப் போனது
அதைப் புதைத்த இடத்தில் நட்ட ரோஜாச் செடி
இரண்டு முறை பூத்திருந்த வேளையில்
மேலும் வேதனையைப் பொறுக்க மாட்டாமல்
வேரோடு அதையும் பிடுங்கி எடுத்து
வேகமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு
கிளம்பி விட்டோம்..
எங்கள் புத்தகங்களுடனும்
துணிகளுடனும் நாற்காலிகளுடனும்.
இப்போது புதிய வீட்டில் வாழ்கிறோம்
இங்குள்ள கூரை ஒழுகுவதில்லை
ஆனால் இங்கு மழை பெய்யும் போது
நனைகிற அந்த வெற்று வீட்டையேப் பார்க்கிறேன்.
கேட்கவும் செய்கிறேன்..
என் நாய் இப்போது தனித்து உறங்கும் இடத்தில்
விழுகிற மழையின் சத்தத்தை.
ஆங்கில மூலம்:
“The Rain” By Kamala Das
[From Only The Soul Knows How To Sing]