Wednesday, June 12, 2013
கவிதை இறகு -வைகாசி
அப்பாவிச் சாட்சியின் கேள்விகள்
நெல்லும் கரும்பும் விளைந்த வயலில்
அடுக்கு மாளிகையின் அஸ்திவாரப் பள்ளத்தை
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
எந்திரமாய் இயங்கும்
பெண்களின் கைகளில்
மண்சட்டிகள் மாறிக் கரையேறுகின்றன
ஆண்கள் உயர்த்தும் கடப்பாறைகள்
பூமியின் மார்பைக் குத்திக் கிழிக்கின்றன
வேகத்தைக் கண்டு வியப்பில் கண்மலர
வேடிக்கை பார்க்கிறான் ஒரு சிறுவன்
பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
என்று அவன் கேட்கவில்லை
நெல்லும் கரும்பும் இனி எப்படி விளையும்
என்று அவன் கேட்கவில்லை
நெல் இல்லாமல் இருப்பது எப்படி
என்று அவன் கேட்கவில்லை
இந்த உலகம் இருக்குமோ
என்றும் அவன் கேட்கவில்லை
இனி தும்பிகளை எங்கே போய்த் தேடுவேன்
என்றும் அவன் கேட்கவில்லை
இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்
மோசடிக் கும்பலின் நாசகாரியம்
முடிவுற்ற பின்னாலாவது
இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்
அப்போது உலகம் தரும் பதில் என்ன ?
-பாவண்ணன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment