பிரியங்களை அறிவிக்கும் வார்த்தைகளை
கூறி விளையாடும் பருவம் கடந்துவிட்டோம்
என்றாலும் என் அன்பை
வார்த்தைகள் கொண்டே
வெளிப்படுத்த யத்தனிக்கிறேன்
வார்த்தைகளற்ற அன்பை
உணர மாட்டாயாயென்பது
எப்பொதும் உன் கேள்வியாக இருக்கிறது
நீயும் வார்த்தைகளின்றி
உணர்வாய் என்று தெரிந்தே
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
என் பிரியங்களை
சொன்னால்தான் தீருமென்றில்லை
எதையும் அடைத்து வைக்கும்
தீர்மானத்தை வலுக்கட்டயமாக
அதீத அறிவோடுடான செயல்பாடுகளை தவிர்க்கிறேன்
வார்த்தைகளால் அவிழ்கவியலாத
இறுக்கம் புதை மணலாக
எனை புதைத்துக் கொள்ளலாம்
வார்த்தைகளிலான பிரியங்களே
எப்பொதும் உதவியாக இருகின்றது
உணர்வுகளும் வார்த்தைகளும்
நிறைந்ததே என் பிரியம்
தினம் பெய்யும் மழையாக
அதைக் கொண்டு உனை நனைக்கவே
எப்பொதும் என் விருப்பம்
-லாவண்யா சுந்தரராஜன்
'நீர்க்கோல வாழ்வை நச்சி"
No comments:
Post a Comment