சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்;
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.
கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.
வெறுவான வெளி மீது
மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று
கரகங்கள் ஆடும்.
நெறி மாறுபட நூறு
சுழி வந்து சூழும்
நிலையான தரை நீரில்
இலை போல் ஈடாடும்.
இருளோடு வெளியேறி
வலை வீசினாலும்
இயலாது தர வென்று
கடல் கூறல் ஆகும்.
ஒரு வேளை முகில் கீறி
ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள
உயிர் வெந்து சாகும்.
-மஹாகவி.
Saturday, August 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment