Saturday, May 8, 2010

என்றென்றைக்கும் ஆனவன் நான்

இருமைகள் என்பது எதார்த்தம் எனில்
அதில் ஒரு கை அள்ளி
என் கண்களைக் கழுவுவேன்
இரவு பகலோ, இறப்போ பிறப்போ
இருமைகள் றெக்கைகளாக
ஒரு பறவைக் கூட்டமாய்
பழுப்பு வானில் பறந்து திரிவேன்


மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி
அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன்
இதுவும் அதுவும் கவ்வி முயங்கும்
இடமோ பொழுதோ வெளியோ
சிந்தும் இன்மையின் இனிமையை
பருகி மகிழ்வேன்


ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான்
எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற
ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது
அதன் வெண்மணற் பரப்பில்
கோபுரங்களும் மலைகளும் கடல்களும்
நகரங்களும் ஆகாயமும் கூட
சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும்
புதைந்து கிடக்கின்றன


என் புல் வெளியில் மரணம்
ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில்
நான் ஒரு நாகலிங்க மரமாவேன்
என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள்
பூக்களாய் தொங்கும்
எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான்.
-சமயவேல்

No comments:

Post a Comment