Saturday, May 15, 2010

வேறு எப்படி சொல்லச் சொல்கிறாய்

தயக்கத்தின் முட்டைகள்மீது
அமர்ந்திருக்கிறது நம்காதல்
எங்கோ ஓரிடத்தில் மென்மையின் நரம்புகள் பூட்டப்பட்ட யாழை
நீ மீட்டிக் கொண்டிருக்கலாம்.


என் வருத்தங்கள் யாவும்
கால் நனையாமல் நீ உலவும்
கடற்கரைப் பொழுதுகள் குறித்துதான்
உயரத்தில் பூக்கும்
கள்ளிப் பூக்களை உனக்குக் காட்டியிருக்கிறேன்
கடலில் குதித்துக் கரையேறும் சிறுபுயலை
உள்நின்று அறிமுகப்படுத்தி யிருக்கிறேன்


காமம் துளிர்விடும் சாயுங்காலம்
சருகுகள் பூத்துக் கிடக்கும் சாலைகளை
நத்தையின் கால் கொண்டு கடந்திருக்கிறோம்
கொடுரமாய் பறக்கவிடப்பட்ட என்னுடலை
சொல்லின்
கனத்த நங்கூரத்தால் பிணைத்தபோதெல்லாம்
நீயும் உடனிருந்தாய்
பசியின் பழச்சாற்றினை நீ அருந்துகையில்
புத்தகங்களைப் பரிசளித்திருக்கிறேன்


இப்போதும் நீ பற்றியிருக்கும்
பிரியத்தின் கோப்பைகளில் மிதக்கின்றன.
என் கவிதைத்துண்டங்கள்
வேறு எப்படி சொல்லச் சொல்கிறாய்
உப்புக்கரிக்கும் என் காதலை
- சுகிர்தராணி.

No comments:

Post a Comment