Saturday, May 8, 2010

பீசாப் பிள்ளைகள்

சாணத்தால் மெழுகிய
அத்தை வீட்டுத் திண்ணை
கிரானைட் பளபளப்பாய் மின்னியது.
தீற்றுக் கல்லினால் தேய்க்கப்பட்டதால்.

அவித்த பனங்கிழங்கை
மேல்சட்டை
உரித்துப் போட்டாள் அத்தை.

நுனிகடித்து சர்ரென
கிழங்கைப் பிளக்க
பளீரென வெளிப்பட்டது
இளஞ்சந்தன நிறத்தோடு மணம்.

மெத்தென்ற திசுக்களாய் இருந்தது
முதலில் ருசித்த குருத்து.

உரிக்கச் சுலபமாய் வந்தது.
வரிக்கோடாய் விழுந்திருந்த
மெல்லிய நார்கள்.

திரண்ட கிழங்கை
சடக்கென ஒடித்து
தேங்காய்த் துண்டுடன் மெள்ள
வாய்க்குள் சுவை கூடியது.

இந்த அனுபவம்
எப்படிச் சொல்வது ?
பிசினைக் கடிப்பது போல் இழுத்து
"பீசா" தின்னும்
என் பிள்ளைகளுக்கு.
- கு.ரா.

No comments:

Post a Comment