Sunday, May 16, 2010

நெடுஞ்சாலை நடனம்

இரவின் கண்ணீரென வழிந்தோடும்
நெடுஞ்சாலை ஆளரவமற்ற திசையில் கிடக்க
கனவின்
ரூபமாய்த் திரண்டவள் அசையத்துவங்கிறாள்

தனது சிவப்பு முந்தானையை
காலடியில் புரளவிட்டுச் சுழல்கிறாள்
கலவையான ஆட்ட அசைவுகளின் பாவங்கள்
வழியற்றுக் குவிந்த வாகனவாசிகளை
மிரளவைக்கின்றன

ஊரற்ற சாலையில் யாரிவள்
இவளை அகற்றுவது இயலுமாவென
ஒருவருக்கொருவர் புலம்பித் தீர்க்க

அவளின் சுழற்சியிலிருந்தே பெருகும் காற்று
அவளையொரு சருகென அடித்துச் செல்ல
சாலை வெறுமையில் தொங்குகிறது

-மாலதி மைத்ரி.

No comments:

Post a Comment