Friday, May 14, 2010

புத்தம் வீடு-ஹெப்சிபா ஜேசுதாசன்.

பனைமரம் தமிழர்களின் அடையாளம், நமது இனத்தின் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறையை தாண்டி வளரும் தமிழ் போல், வறட்சியை தாங்கி போராடி வளரும் இந்த பனைமரம். வளர ஏற்றதில்லை என்று தாவரஇனங்கள் புறகணித்த எந்த மண்ணையும் பனைமரம் புறக்கணித்ததில்லை.
செல்லபிள்ளையாய் தென்னைமரம் தண்ணீரை குடித்து வளர்ந்தாலும் , மேகத்தை மட்டுமே நம்பி வாழும் நம்பிக்கை மரம் அது . மழை பொழிவது எல்லாம் அதற்குதானோ என்று பயணங்களில் எதிர்ப்படும் ஒற்றை பனைமரத்தை பற்றி நினைத்ததுண்டு. வயதோடு வாழும் மரங்களுக்கு மத்தியில் தலைமுறைகளோடு வாழும் மரமது.

பனையை மட்டுமே நம்பி வாழும் வறண்ட நிலங்களின் ஒரு குடும்பத்தை பற்றிய கதை "புத்தம் வீடு".

கண்ணபச்சி அவர் குடும்பத்தின் பெரியவர். அவரது பொறுப்பற்ற இரு மகன்கள். மூத்த மகனின் மகள் லிஸி.இளைய மகனின் மகள் லில்லி.லில்லியின் இளவயது காலத்தில் ஆரம்பமாகிறது கதை.
பழம்பெருமைகளோடு வாழும் ஒரு வீடு "புத்தம் வீடு" மற்றும் அதன் மனிதர்கள்.பெருமையும்,வறுமையும் கொண்ட இரு உள்ளங்களுக்கிடையே ஒரு காதல்.காலம் மாறுகிறது,வாழ்கையில் மனிதர்களும் மாறுகிறார்கள் அவரவர்களின் சொந்த விருப்பங்களை கணக்கில் கொண்டு. லில்லி இந்த கதையின் உயிர்முச்சு , அவளை சுற்றியே இந்த கதை முழுவதும்.

மனிதர்கள் மாறுகிறார்கள்,சகோதரர்கள் பகை கொண்டு அலைகின்றனர்,
சகோதரிகளும் மாறுகிறார்கள்.எளிய வாழ்வு ,தூய்மையான அன்பு இவைமற்றுமே இவர்களது இலக்கு.பனையின் வாழ்வு போலவே இந்த புத்தம் வீடு குடும்பமும் ,வறுமை எதிர்ப்பு என்று அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்கின்றனர்.

உண்மைதான் ,இவள் கூட கண்டுகொண்டாள்.

"அக்கா,வீட்டிலே என்ன காரியமிண்னு கேக்கப்போறக."

குரலில் ஒரு நடுக்கமும் இல்லையே! லில்லியா பேசுகிறாள்! அவள் இட்டுத் தாலாட்டின, எடுத்து சீராட்டின, சின்ன லில்லிக் குட்டியா இவள்? கண்களில்தான் சந்தேக நிழல் எப்படிப் படர்கிறது!

"என்ன சொன்னே லில்லி?"

"எனக்குத் தெரியும் அக்கா.அதோ, அங்கே பார்."

ஐயையோ! இன்னும் நின்றுகொண்டிருக்கிறானே ! மரியாதையோடு பிழைத்துபோக விடமாட்டான் போலிருக்கிறதே!

அவளால் லில்லியின் முகத்தை பார்கவோ அவளுக்கு ஒரு வாக்குப் பதில் சொல்லவோ முடியாத நிலையிலிருந்தாள். அவள் குற்றம் செய்தவள்தானா? என்ன குற்றம் செய்தாள்? தனக்குத்தானே பதில் கொடுக்க முடியவில்லையே! தனது குறுகுறுக்கும் நெஞ்சையே சமாதானம் செய்ய முடியவில்லையே! இந்த கல்லாக நிற்கும், இந்த சிறுக்கிப்பெண்ணுக்கு எப்படி சமாதானம் சொல்வது?

" அப்பவோ,பெரியப்பாவோ அறிஞ்சா..."

".................."

"எலும்பெ மீதி வைக்கமாட்டாவ."

"...................."

"கண்ணபச்சி அறிஞ்சா சாவாரு."

" லில்லி! எனக்க பொன்னு லில்லிக் குட்டீ! கண்ணபச்சிக்கிட்டே இதெச் சொல்ல ஒனக்கு எப்படி மனசு வருது? நான் அப்படி என்ன செஞ்சேன்? நானாப் போய்ப் பேசினேன்? அப்படி நெனைச்சியா?"

" அக்கா, ஒன்னே ஆரு சொன்னா? அவனைத்தானே சொன்னேன். அவங் கண்ணப் பாரு. கீரெ வித்தெக் கொண்டு வந்தான்.நீயா கேட்டே?"

" உஸ், லில்லி பையப் பேசேன், மானம் போவுது."

" அவுக அறிஞ்சா மானம் போவாதா? யக்கா ? அவங்காலே முறிச்சுப் போடுவாவ. பொறவு பனையேறமாட்டான்.?"

"ஒனக்கு இப்ப என்ன வேணும்? கண்ணபச்சிக்கிட்டே சொல்லனுமா? "

"அது நீ நடக்யதை பொறுத்திருக்கு."

"நான் நடக்யது! என்னா நடக்யது! நீ இப்ப போலீஸ்காரியா வந்து ரொம்பக் கண்டுபிடிச்சிற்றே! நீ ஸ்கூலிலே போயிற்று வந்திற்று இருந்தப்போ ஆரு ஓம் பின்னாலே திரிஞ்சு உளவு பாத்தது?"

"எம்பின்னலே திரிஞ்சா ஆருக்கு என்ன கண்டுபிடிச்ச முடியும் ?"

"நீ இப்ப கண்டுபிடிச்சது என்னண்ணுதான் கேக்யனே ? இப்படி நீ மானத்தை வாங்குதியே ?"

அவளுக்கு துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.அவள் கண் கலங்குவதை பார்த்து லில்லிக்கும் குழப்பமாக இருந்தது. ஆனாலும் விடாமல்,

"அக்கா நான்தான் சொல்யனே, நான் இப்ப ஆருக்கிட்டேயும் ஒண்ணும் சொல்லப் போவலேணு. எனக்கு பெலத்த சந்தேகமாயிருந்தது.
ஆனாலும் இதுக்கு இடம் கொடுக்கப்படதக்கா. இனி உன்கிட்டே இவன் பேசிச் சிரிக்கியதெப் பாக்கட்டும். ஆமா , நான் சொல்லிப்போட்டேன் !"

"உனக்கு எம்மேலே பெலத்த சம்சயமாயிருந்ததா ? குட்டீ ! நீ என்னே ஆருண்ணு நெனச்சே? நான் தேவடியா , நீ உத்தமி.அதுதானே ? நீ என்னே அக்கா அக்காண்ணு ஏன் விளிக்யே ? என்கிட்டே சொல்லிப் போட்டியா ? என்னத்த சொல்லிபோட்டே ? ஆமா, நானும் சொல்லிப்போட்டேன். நீ என்ன அக்காண்ணு வாய் நிறைய விளிக்கணுமானா என்னே அக்காண்ணு நினைக்கணும். இல்லே தேவடியான்னு நெனேச்சியானா, எனக்குப் போலீஸ்காரியா மாத்திரம் இரு. அக்காண்ணு விளிக்காதே. வேண்டாம்! வேண்டாம்! !"

மனம் பொருமி அழுதேவிட்டாள் லிஸி. அவள் அழுவதை கண்டு லில்லியும் மனம் கலங்கினாள். கண்களில் நீர் துளிக்க, தமக்கையின் கையை பற்றிக்கொண்டு " அக்கா, பொன் அக்கா..." என்று ஏதோ கூறவந்தவளின் கையை வெடுக்கென்று தட்டிவிட்டு கண்ணிரை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டாள் லிஸி.லில்லிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

எளிய மொழி,மனிதர்கள் வாழ்க்கையை மிகைபடுத்தாத கதை,காலங்களின் மாற்றங்களை சொலும் விதத்தில் இது தமிழின் கவனம் பெற்ற,பெறவேண்டிய ஆக்கங்களில் இதுவும் ஒன்று.என்று படித்தாலும் அத்தனை காலத்திற்கும் பொருந்தும் நூல்களில் "புத்தம் வீடு" பனையை போலவே தலைமுறை தாண்டிநிற்கும்.

புத்தம் வீடு
ஆசிரியர்-ஹெப்சிபா ஜேசுதாசன்.

காலச்சுவடு பதிப்பகம்.
669,கே.பி.சாலை.
நாகர்கோவில்.629 001.
போன் -4652-278525.
விலை - 120/-INR
பக்கம்- 157.

No comments:

Post a Comment