Saturday, May 8, 2010

காசு

அம்மா...
நலம், மாப்பிள்ளையும்
நானும்.

நீ செய்து விட்டுப் போன
ஆடி மாச
அசத்தல் சீரால்.
வாம்மா... போம்மா..
வாய்நிறைய அன்பு
அத்தைக்கு என் மீது.

எதிர் வீட்டு
மாமியார் மருமகளுக்கிடையே
மல்யுத்தம்.
பிறந்தநாள் பரிசாய்
நீயளித்த
கடிகாரம் பார்ப்பதற்காகவே
அடிக்கடி மணி பார்க்கிறார்
மாமா.

மாதா மாதம்
நீ கொடுத்தனுப்பும்
அரிசி, பருப்பு,
அஞ்சல் வழிப் பணம்...
தலைகால் புரியவில்லை
மாம்பிள்ளைக்கு..

மலைக்குப் போன
மச்சினருக்கு
நீ செய்த மரியாதை
உறவுக் காரங்க மத்தியில்
ஒசந்த இடம்
நமக்கு.

சமைஞ்சு நின்ன
நாத்தனாருக்கு
நீ தந்த வளையல்தான்
ராசி நகையாம்.

அதற்குப் பின்னால்
அணி வகுத்ததாம்.
ஐந்தாறு வலையல்கள்
ஆமாம்...
நீ சிறுநீரகம்
விற்ற காசில்
மிச்சம் மீதி இருக்கிறதா?

அடுத்த வாரம்
வருகின்றோம்
மாப்பிள்ளையும்
நானும்
- கவிஞர் உமா சக்தி.

No comments:

Post a Comment