Friday, February 12, 2010

தொக்கி நிற்கும் கேள்விகள்

சோகங்களின் சுமை கூடும்போது
புல்லாங்குழலிசை கேட்பாயா
பூச்செடிகளுக்கு நீருற்றுவாயா?

கடிதத்தில் சில இடங்கள்
கலங்கியிருந்தனவே அழுதாயா?

வடுக்களில் சூடுபட்டால்
வலிக்குமா முன்போல்?

எப்போது பழகப்போகிறது மனம்
ஆளில்லாத வீட்டின் பூட்டை
இழுத்துப் பார்க்காமல் திரும்புவதற்கு.

இப்போதும்
திரும்பிப் பார்க்கிறாயா
என் பெயர் சொல்லி
பிறர் அழைத்தால்...

கண்ணில் படாமல்
இருந்திருக்கக் கூடாதா
புயலில் இறந்தோர் பட்டியலில்
உன் சாயல் புகைப்படம்.

நீ வரும் நாளில்
எப்போதும் போல்
வாசல் திறந்திருக்கும்
நான் இருப்பேனா
எதிர்கொண்டு வரவேற்க...

நேற்று பெய்த மழையில்
நனைந்தாயா?
எனக்கு ஜலதோஷம்.

சொல்ல மறந்த
பிறந்தநாள் வாழ்த்தைவிட
சுமையானதா...
வெளிசொல்லாத நேசம்?

அஞ்சல் நிலையத்திலும்
தெரிவிக்க வில்லையா?
உன் முகவரி மாற்றத்தை...

பிளாஸ்டிக் பூவைச் சுற்றிய
வண்ணத்துப் பூச்சி
உன் அன்புக்கு ஏங்கிய நான்
அதிகம் ஏமாந்தது யார்?

குமுறல்களை
அதிகம் பகிர்ந்துகொள்வது
தலையணையா
கவிதைகளா..?

எடைக்குப் போயிருக்குமோ..?
பரண் மேல் கிடந்த
பழைய புத்தகத்தோடு
ஸ்டிக்கர் பொட்டும் ரோஜாவும்...
-துறையூர் மணி.

1 comment: