Monday, June 7, 2010

மழையைப் போலவே

மழைபெய்து கொண்டிருக்கிறது
மழை மகிழ்சியின் குறியீடு என்கிறாய்
எனக்கு மழை தனிமையின் குறியீடாய்.
ஒரே நாளில் பெரியவர்களின் உலகில்
அடித்து தள்ளிய அன்றைப் போல
அத்துமீறலின் குறியீடாய் குழந்தைதனங்களின்
வீழ்ச்சியாய் மழை துயரத்தை பேசுகிறது

பெரியவர்களின் இரசனையின் முன்னால் கவனிப்பாரற்ற
சிறுமியாய் என்னுட் தனிக்கிறேன்.
மழை பெய்து கொண்டேயிருக்கிறது
நிற்பதற்கான அறிகுறிகளற்று..
அன்றைப் போலவே இரைச்சலுள் காணமல்போன
உணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எல்லோரும் சொல்கிற அழகியை
நீயே கண்டுபிடித்தது போல அழகி என்கிறாய்.
யார் தான் அழகில்லை என்கிறேன்
எல்லோரும் பேசுகிற அரசியலை பேசுகிறாய்
எல்லோருடைய எல்லாவற்றையும் புறக்கணிக்காத நீ
தனித்துவமாய் பெண்ணியம்,
சமத்துவம்,பின்னவீனத்துவம்
என எல்லாப் புண்ணாக்கையும் பேசுகிறாய்

நீ மழையை மழைக்காய் இரசிக்கிறாயா?
அல்லது
எல்லாரும் இரசிக்கிறார்கள் என்பதற்காக இரசிக்கிறாயா
எனக்கு நீயும் மழையைப் போலவே அந்நியமாய் இருக்கிறாய்.
-தான்யா.

No comments:

Post a Comment