Friday, June 11, 2010

எங்கள் சாமிகள்!

லோகம் துன்பப்பட நேர்கையிலெல்லாம்
இவர்கள் அவதாரங்களாகிப் போரிடுவர்

துர்மிருகங்கள் பற்றிய பயங்களுக்கு
இவர்களின் நாமம் ஜெபித்தாலே போதும்

ஏழைபக்தனைப் பணக்காரனாக்கவும்
பணக்காரத்திமிரை ஏழையாக்கி அடக்கவும்
வெறும் திருவிளையாட்டுக்கள் கொண்டே
செய்யமுடிந்தவர்கள் இவர்கள்

யாருமற்ற அனாதைகளுக்கும்
பால்நினைந்தூட்டும் தாயினும்
சாலப்பரிந்து ஊட்டும்
காருண்யக்கதைகளின்
நாயகர்கள் இவர்கள்

இவர்கள்பால் பற்றுவைத்து
இவர்களே சரணென்று
இவர்களின் பசிதீர்க்க
பிள்ளைக்கறி படைக்கவும்
தயங்காத மானிடர்க்கு
மரணித்த குழந்தையையும்
உயிர்தரிக்க வைக்கும்
மாதிறனுடையவர்கள்

தீமையை அழிக்கவே சமரெனினும்
அரசனைப்போல் அன்று கொல்லாமல்
நின்று கொல்லும்
நிதானம் புரிந்தவர்கள் இவர்கள்

இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!

-செல்வநாயகி.
"நிறங்கள்"

No comments:

Post a Comment