கூந்தல் உயர்த்தினாள்
அவன் உவமைப் பெட்டியில்
சூரியன் கிரணங்களைக்
கவிழ்த்தது கண்டான்.
அவள் கூந்தல் முடித்துச்
சடையிட்டாள்.
அவன் உவமைப் பெட்டியில்
மேகங்கள் புரண்டு
படுத்தது கண்டான்.
அவள் கண்ணாடி பார்த்து
மலர் சூடினாள்.
அவன் உவமைப் பெட்டியில்
வானத்தில் ஒரு நிலாவைச்
செருகியது கண்டான்.
அவள் அவனை நோக்கித் திரும்பி
கண்களில் வெளிச்சம் பாயப்
புன்னகை செய்தாள்.
அவன் உள்ளம் திறந்து
புன்னகை செய்யுமுன்
உவமைப் பெட்டிக்குள்
தலைகீழாக விழுந்தான்.
-பாலா (எ) பாலசந்திரன்.
No comments:
Post a Comment