
ஏதோ சொல்ல வருவதாய்த் தெரிந்தது
உன்னை டா போட்டு
கூப்பிடலாமா என்றாய்?
உம் என்றேன்
சாப்பிட்டியாடா
படிச்சியாடா
எழுதினியாடா
தூங்கினியாடா
நலமாடா...
வாடா.. போடா..
அப்பாடா
கண்ணிமைக்கும் நேரத்தில்
எத்தனை டா..
நான் சிரித்துவிட்டேன்
என்னடா சிரிக்கிறாய் என்றாய்
டாடா மட்டும் சொல்லிடாதே !
வெட்கத்தைத் தின்றபடி
மெல்ல சொன்னாய்
ச்சீ...போடா..
மறுபடியும் நான் சிரித்தேன்
எனக்கு நன்றாகத் தெரியும்
குதிரையின் காலில்
கட்டப்பட்டிருக்கும் லாடம் போல
உன்னோடு
இணைக்கப்பட்டிருக்கிறேன்.
என்றேனும் ஒரு தேதியில்
ஏதேனும் ஒரு வீதியில்
விட்டுவிடத்தான் போகிறாய்.
என்னை.
- கோ.வீரா
No comments:
Post a Comment