Monday, March 15, 2010

பூனை

காவல் பலிக்கவில்லை
தினமும் பால்திருட்டு
எதேச்சையாய்ப் பார்த்ததும் நின்று முறைக்கிறாய்
முன்வைக்கவோ
பின்வைக்கவோ
உனது தந்திரம் புரியவில்லை
துடிக்கும் மீசையில் கர்வம்
கண்களில் கவியும் குரூரம்
உடம்பில் புரளும் முறுக்கு
உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்
எலியாகவா?
எதிரியாகவா?
சாத்திய ஜன்னல்கள் நடுவில்
கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது
சோறு உனக்குப் பிடிப்பதில்லை
கறி நான் சமைப்பதில்லை
குழந்தையிருக்கும் வீடு
பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை
நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால்
எச்சரிக்கையானது வீடு
இன்றுமுதல்
இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ!
எச்சில் மீன் தலையைத் துப்ப
என் வாசலா கிடைத்தது
அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது
உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்
பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்
என்ன புரிந்து எகிறினாய்
உன் மீன் எனக்கு இரையாகுமா?
என் வாசல் தூய்மை தவறாகுமா?
-பாவண்ணன்.

No comments:

Post a Comment