Friday, March 26, 2010

ஒரு மரத்தைக்கூடக் காணமுடியவில்லை

ஒரு மரத்தடி நிழல்போதும்
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என்மனம் தாங்க மாட்டேனென்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்.

கர்ப்பிணிப் பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மரநிழலில்
விட்டுப்போக விழைகிறேன்

மரங்களின் தாய்மை
முலைமுலையாய்க் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையைக்கோதும்

மரம் உனக்குப் பறவைகளை அறிமுகப்படுத்தும்
அந்தப் பறவைகள்
வானத்தையும் தீவுகளையும்.
வானமோ
அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே.

ஒரு மரத்தடி நிழல்தேவை
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப்
போவேன்.
-தேவதேவன்.

No comments:

Post a Comment