Sunday, March 7, 2010

மெளனத்தின் மிச்சம்

ஆத்தா
ஆடு வளத்தா...!
கோழி வளத்தா...!
நாய் வளர்க்கல..!
ஏன்னா..
அடிச்சுத் திங்க முடியாதில்ல.
-விகடகவி.
நீ
சொல்லியபடி
வரைந்தபடி
இல்லை
பறவைகள்.

நேரில்
பார்த்தபோது
பறவைகளாக இருந்தன.
பறவைகள்.
- வே.பாபு.
ஒருமுறை அல்ல
இருமுறை அல்ல.

ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் கொண்டிருக்கிறாள்.
அம்மா.

கூட்டக் கூட்ட
வந்து கொண்டேயிருக்கிறது
குப்பை.

-பொன்.குமார்.
கடவுள், குழந்தை
இரண்டும் ஒன்று
இனியும் சொல்லாதீர்
இப்படி.....

கருவறை தாண்டி
வெளியே வர முயன்றவை.
குழந்தைகள் மட்டுமே.
-நாணற்காடன்.
பகல்ல பூராவும்
பஞ்சாலையில் கெடந்து மாய்ஞ்சு
பொழுது சாஞ்சா
அடுப்புல கெடந்து மாய்ஞ்சு
வகையா பொங்கி
ஆசையோட பரிமாறும் மீனாட்சிக்கும்
"நீ மொதல்ல
சாப்புடு புள்ள" ன்னு
அன்பாய் அதட்டும்
அவ புருசனுக்கும்
இன்னக்கி வரைக்கும்
தெரியாது
என்னக்கி காதலர் தெனமுன்னு.
-அருணோதயம்
ஒவ்வொரு வார்த்தையும்
ஒரு கேள்வி
ஒவ்வொரு கேள்வியும்
ஒரு சந்தேகம்
ஒவ்வொரு சந்தேகமும்
ஒரு கல்

ஒவ்வொரு கல்லும்
ஒரு சந்தேகம்
ஒவ்வொரு சந்தேகமும்
ஒரு கேள்வி
ஒவ்வொரு கேள்வியும்
ஒரு வார்த்தை

ஒவ்வொரு வார்த்தையும்
மெளனத்தின் மிச்சம்.
-சுகுமாரன்
வாழ்தலின் பாதுகாப்பு
குறித்து
பிரக்ஞை ஏதுமற்றிருந்தேன்
உருளும் எதிர்காலம் விழிகளினுள் தேக்கி
வேட்டுவனின்
விரல்களிடை யொழுகும்
கயிற்றின் நுனியில் தலைகீழாய்ப் படபடக்கும்
பறவைகளிரண்டின்
பயணமென்றினைக்
கடக்காத வரை
-கலாப்ரியா.

No comments:

Post a Comment