Thursday, October 1, 2009

ஞானாட்சரி நீ சொல்வாயா?

யார் யார் என்னை பார்க்கிறார்கள் ?
பார்க்கிறார்கள் என்ற உயர்திணை
முடிவு கூடத் தவறு தான்.

எது எவரால் பார்க்கப் படுகிறேன் என்பதே சரி.
வீதியில் நடந்தால் கல்லாப் பெட்டிக்
கிண்ணத்து வழவழப்பைத் துழாவிக்கொண்டு
கடைக்காரர் என்னைப் பார்க்கிறார்.

தெருமாறிச் செல்லும் நாய் பார்க்கிறது
அதைத் தொடரும் மற்றொரு நாயும் பார்க்கிறது
ஒரு சிறுவன் ஒரு சிறுமி அவர்களிடம் நானொரு
காதல் கடிதத்தை இன்னாளிடம்
கொடுக்கச் சொல்வேனோ என்று பார்க்கின்றனர்.

பெருமாள் மாட்டுடன் எதிரில் வந்தவன்
ஒன்றும் கேட்காமல் என்னைப் பார்க்கிறான்.
அவனது மாடும் என்னைப் பார்க்கிறது.
வெள்ளைப் புள்ளிகள் மேவிய ஆடுகள்
கிளுவை இலைகளைப் புசித்துக் கொண்டு
என்னைப் பார்க்கின்றன.
தபால்காரர் கையில் அடுக்கிக் கொண்ட
கடிதக் கடடுகளை விரல்களால் பிரித்து
எனக்கு கடிதம் இல்லை என்று
சொல்லாமலே என்னைப் பார்க்கிறார்.

குட்டிகள் பின்பற்ற தெருவின் ஓரத்தில்
குறுங்கால்களோடு நடக்கும்
பெரிய பன்றி என்னைப் பார்த்தது.
ஆனால் குட்டிகள் என்னைப் பார்க்கவில்லை
தாயைத் தவிர யாரையும் பார்க்கத்
தெரியாதவை. மேலும் இன்னும் வயதாகவில்லை

வரிசையாய் மின்சாரக் கம்பிமேல்
உட்கார்ந்திருக்கும் காக்கைக் கூட்டத்தில்
ஒன்றாவதென்னைப் பார்க்காமலா இருந்திருக்கும் ?

எல்லாம் எல்லோரும் என்னைப் பார்ப்பது
போலப் பிரமை எனக்கேன் வந்தது
ஞானாட்சரி நீ சொல்வாயா
எப்போதும் என்னை விமர்சிக்கும் உன் வாயால் ?
-ஞானக்கூத்தன்.

No comments:

Post a Comment