Sunday, October 4, 2009

நானறியா வனமொன்றில்

மீன் தொட்டியிலிருந்து
துள்ளி விழுந்த சிறு மீனாய்
உன் விழிகளுக்குள் விழுந்து
கிடக்கின்றது என் இரவும் பகலும்.
நீ
என்னை அழைத்து சென்று கொண்டே
இருக்கின்றாய்
நானறியா வனமொன்றில்
வேட்டை மானனென.
- ஆ.முத்துராமலிங்கம்
இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது
நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு
எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான்
எதுவுமில்லை

விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை

- சல்மா
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

என்னை அழி
அல்லது
புறந்தள்ளி கழி

மகிழ்ச்சி தானெனக்கு

அழிக்க முயன்றால்
மூளையில் இருக்கிறேனென உணர்
கழிக்க முயன்றால்
இதயத்திலிருக்கிறேனென உணர்

எப்படியான போதும்
இருக்கிறேன் நான்.
-பாலபாரதி.
எப்படி இருக்கே?
அம்மா அப்பா நலமா?
அண்ணன் சௌக்கியமா?
ஊர் கதை என்ன?
நண்பனைப் பார்த்தாயா?
உன்னை மறந்தே போனேன்...
எல்லாம் சுகம்தானே??
..................
கேட்கும் மற்றவர்க்குத் தெரியாது,
இறந்த உறவும் இருந்த உறவும்
திடீரென்று ஓர் இரவில்
'இல்லை' என்றானது...

எனக்கு, எல்லாமே..இனி
நீயென்றாகிப் போனது!!
- வேதா மஹலஷ்மி.
நீ
அந்தக் கடிதத்தை
எழுதாமலேயே விட்டிருக்கலாம்
எழுதிய கடிதம்தான்
வாசித்தால் முடிந்துவிடும்

எழுதாமல் விட்டிருந்தால்
முடிக்காமல்
வாசித்துக் கொண்டே இருந்திருப்பேன்
வந்த கடிதத்தில்
இருப்பதுதான் இருக்கும்

வராமல் விட்டிருந்தால்
நினைப்பதெல்லாம் இருந்திருக்கும்
நீ
அந்தக் கடிதத்தை
எழுதாமலேயே விட்டிருக்கலாம்

-வாசுதேவன்
வாழ்ந்து வருதல்

சகல கிரகங்களும்
சனீஸ்வரனாகி இருந்தன
அவன்
காதலிக்க
துவங்கி இருந்தான்
செல்வேந்திரன்
ஓடிக்கொண்டிருந்தது நதி.
கரையில் அமர்ந்திருந்தேன்.
வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய்
நீ
நதியின் சுழல், ஆழம், குளிர்மை
எனப் பேசிக்கொண்டே போனாய்.
ஓடிக்கொண்டிருந்தது
நதி.

கேட்டுக்கொண்டிருந்தேன்
ஒரு முடவனைப் போல.
ஏதோ ஒரு தருணத்தில்
உன் தலை சிலுப்பில்
பூ தூறலாய் விழுந்தது
நதி என் மேலும்.
நீந்த முடியாத நதி.
-மாலினி புவனேஷ்

No comments:

Post a Comment