Friday, October 23, 2009

கவிதை இறகு-ஐப்பசி

எல்லா வீடுகளையும் போலவே
கிணற்றடித் தண்ணீரை
குடித்து வளரும்
எங்கள் வீட்டிலும்.

வதங்கிச் சுருண்டு
இலைகளில் தொங்கும்
செம்பருத்திப் பூக்கள் தவிர்த்து
அம்மாவினுடையதும்
அக்காவினுடையதுமாக
விரல்களைக் கடன் வாங்கி
பச்சையாய் துளிர்க்கும்
வெண்டைக்காய்ச் செடிகள்
அத்தோட்டத்தின் தனித்தன்மை.

'மூளைக்கு நல்லது' என்று
மருத்துவ குணம் கூறி
அதன் காய்களில் ஒளிந்திருக்கும்
என் அல்ஜிப்ரா கணக்கிற்கான
விடைகளை நோக்கி
ஆற்றுப்படுத்துவாள் அம்மா.
மதிய உணவில்
பெரும்பான்மை வகிக்கும்
அதன் 'கொழ கொழ' த் தன்மை
வழக்கம்போல் பள்ளியில்
என் விரல்களில் பிசுபிசுத்து
வராத கணக்கைப் போல்
வழுக்கிக் கொண்டிருக்கும்.

முன்புக்கு முன்பு
அதன் காம்புகள் கிள்ளி
கம்மல் போட்டுக்கொள்ளும்
அக்கா இப்போது,
வைரங்களை நோக்கி
விரியுமொரு கனவில்
' உங்களுக்கு வாக்கப்பட்டு
என்னத்தைக் கண்டேன்' என்று
அத்தானிடம் பொருமுகி்றாள்.

கடன்முற்றித் தத்தளித்த சூழலில்
கியான்சந்த் அண்ட் சன்சுக்கு
கைநடுங்கி கையெழுதுத்திட்டு
வீட்டுடன் தோட்டமும்
விற்றார் அப்பா.
முன்வாசலில் தொங்கும்
குரோட்டன்ஸ் செடி கடந்து
பிஞ்சு வெண்டைகள் பொறுக்கி;
கூர்முனை ஒடித்து;
தள்ளு வண்டிக்காரனிடம்
பேரம் பேசுகையில்
இப்போது உணர்கிறேன் ............

ஒவ்வொரு வெண்டைக்காயிலும்
ஒளிந்திருக்கிறார்கள்
மென்மையான
விரல் கொண்ட
ஒரு அம்மா ;

கனவுகள் விரியும்
ஒரு அக்கா ;

கைகள் நடுங்கும்
ஒரு தந்தை ;

மற்றும்
கணக்குகள் துரத்தும்
ஒரு பையன்.
-நா. முத்துக்குமார்.

No comments:

Post a Comment