சபலம் நிறைந்த கூட்டத்தில்
என்னை நெருங்கி
பெண்கள் பற்றிப் பேசினான்
வீடு, வாசல், படிப்பு
அப்பா, அம்மா, காதலன் என
எல்லோரையும் பற்றிக் கதைத்து
நேரம் பார்த்து விடைபெற்று
இயல்பாய் இருந்தேன்
நேசம், காதல் போன்ற
உணர்ச்சிகளற்று
ஸ்நேகம் பேணிக் கை குலுக்கி
காதலின்றிப் பிரிவது கடினமாயில்லை.
-தான்யா வியாதி வயோதிபம்
மகளுக்குக் கல்யாணம்
தொலைந்த உடைமைகள்
ஆயிரம் சொல்லி
பரிதாபம் விற்றுக் காசு பார்க்காமல்
நீண்ட அலுமினியக் குச்சி
கறுப்புக் கண்ணாடியுடன்
ஓடும் ரயிலிலும்
தடுமாறாமல்
பிளாஸ்டிக் கவர், பேனா ரீபில் விற்கும்
அந்த மனிதனைப் பார்க்கும்போதெல்லாம்
ஏதேனும் வாங்குங்கள்
நீங்களும்
-இந்திய ராஜா.அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில்கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா ?
ஆசையாய்க் கொஞ்சி வளர்த்த
பறவை விலங்கு இறந்த வேளையில்
நெருங்கிய உறவை இழந்ததுபோல
துக்கப்பட்டதுண்டா ?
அறமுகமில்லாத ஒருவர்
முகவரிக் குழப்பத்தில் திண்டாடிய போது
தெரிந்தவரைக்கும் சரியாக
வழகாட்டியதுண்டா ?
நலிந்தவர் மூத்தவர்
நிற்கத் தடுமாற
சிரமப்பட்டுப் பிடித்த இடத்தை
விட்டுக் கொடுத்ததுண்டா ?
விபத்தில் சிக்கி
காயம்பட்ட யாரோ ஒருவருக்காக
நெஞ்சு கிடந்து
அடித்துக்கொண்டதுண்டா ?
பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை குறுக்கிட
பதறியடித்து
பிரேக் போட்டதுண்டா ?
அப்படியானால்
வாழ்த்துக்கள்
இன்னும் நீங்கள்
மனிதராய் இருக்கிறீர்கள்.
-சகாரா
மூடிய மண்ணுக்குள்ளிருந்து
பிரபஞ்சத்தை பார்க்க
எந்தவித ஜன்னலும் இல்லை.
இரவும் பகலும் மாறிமாறிச் சுழல்வதை
அறிய முடியாததொரு தருணத்தில்
தனிமையின் தீராத வலி.
பேச்சுத் துணைக்கு ஆளற்றவனத்தில்
காற்றின் ஓசையும்
தலைவிரித்தாடும் மரங்களின் சலசலப்பும்
விட்டு விட்டு தொடரும் பீதியென
விரல் நீட்டிப்பார்க்க மறுத்த
வேர்களின் நுனியில்
மெளனம் நிரப்பப்பட்டது.
இமைவிரித்து மூடும் கணங்களில்
எவ்வித சலனமுமற்று
கும்மிருட்டுப் பயம் தேங்கிக் கிடக்கும்
ஒளியென்று சொல்ல எதுவுமில்லை
-ஹெச்.ஜி.ரசூல்.
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.
-காசி ஆனந்தன்.
பதங்கமாதலின் விரிவைப் படித்துக்
கொண்டிருந்தாள் சஹானா
வீட்டில் சஹானா என்றும்
பள்ளியில் மெர்லின் என்றும் அழைக்கிறார்களாம்
யாரைப்பிடிக்கும் என்கையில் மெட்ராஸ் அப்பா என்கிறாள்
சென்னையிலே குப்பைக்கொட்டும் நான்
சிரித்தபடியிருக்கிறேன்
திடம்
திரவமாகாமல் வாயு நிலை மாற்றமாம்
பதங்கமாதல்.
சூடம் எரிதல் எ.கா. என்கிறாள்
மழலைப்பேச்சில் மறுபடியும் மறுபடியும்
பதங்கமாக்கிடுகிறாள்
அப்பாவுக்கு முத்தம் கொடு
என்கையில்
சஹானாவாகி உயிர்ப்பிக்கிறாள்
எஸ்.சஹானா மெர்லின் 4ஆம் வகுப்பு ,ஆ பிரிவு.
-கென். எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.
-அனிதா.
எப்பவாவது ஒரு
கொக்கு பறக்கும்
நகருக்கு மேலே என்
கவசமும் வாலும் நீளும்
உருகி ஓடும்
ஊருக்கு வெளியே
-தேவதச்சன்.
நீ விரட்டிய
பிரகாரப் புறாக்கள்
வட்டமடித்து விட்டு
மீண்டும் வந்தமருகின்றது
உன் விரட்டலை யாசகம்
பெற.
நீ மீண்டும் கைகளை வீசுகின்றாய்
உன்னில் விரிந்து மறைகின்றது
ஒரு பறவையின் சிறகு.
-ஆ.முத்துராமலிங்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment