Monday, October 5, 2009

உன்னை பிரிவதற்கில்லை நான்!

கரும்பூதமாய் தெரிகிறது
கல்லடிப் பாலம்...
அப்பால், விரிந்த வெளியில்
துயர்போல் இருள் கவிந்துளது...
உறைந்த மௌனத்தினூடு
ஒளியிழந்த வாவியின்
அலைகள் கரையுரசும்
சிறு சிறு ஒலியும் தெளிவுறக் கேட்கும்...
இருள் சூழ்ந்த என் சிறு நகரை,
நேற்றைய நாள் நிகழ்வுகளின்
கீற்றுகள் நெஞ்சிற் கிளர
இங்கிருந்து துயருடன் பார்த்திருப்பேன்!
பௌர்ணமி இரவில்
தங்கச் செதில் முளைத்து
தகதகக்கும் மட்டுநகர்
வாவிக் கரையோரம்
காற்றில் நடக்கும் சுகத்தினை இழந்தேன்!
விளக்குகள் ஒளி சுடரும்
உன் தெருக்களில்
நான் உலவிய இரவுகள் போயின!
எழிலும் வளமும் நிறை
என்சிறு நகரே!
என் இதயத்தினின்றும்
உன் தொப்புள் கொடி அறுந்து போயிற்று
உன்பால் பசியுறுகிறேன் நான்
இன்று உன் வனப்புகளை
உயிர்ப்புடன் உணர்கிறேன்

பொன்னும் கனியும் விளையும்
உன் இளமையில் காதலுறுகிறேன்
உன் வாசத்தை
நுகரத் துடிக்கிறது
என் நாசி
உன் தெருக்களை
அளைய விழைகிறது
என் உடலம்
உன் தேனை உறிஞ்சி
பொலிந்து நிமிர்வுற
அவாவி நிற்கிறது என் இதயம்!
உன்னை பிரிவதற்கில்லை நான்!


-வாசுதேவன்
"வாழ்ந்து வருதல்"

No comments:

Post a Comment