தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்.
இல்லையெனில்
மரண அவஸ்தை
கண் விழித்துப் பார்க்கையில்
பகலா
இரவா
ஏதும் புரியாத மயக்கம்
பகலுமின்றி
இரவுமின்றி
அந்திப் பொழுதாய் இருந்தாலும்
சில்லென்ற குளிர்காற்றும்
சிங்காரப் பூமணமும்
உன் முத்தம் தந்திடுமோ?
நீ நேசிக்கிறாயா
இல்லையா என்று புரியாமல்
காத்திருக்கையிலும்
மனசுக்குள் ஒரு
வானவில் தோன்றுமா?
பகலென்று தெரிந்தால்
சிறகுகளை விரிக்கலாம்.
இரவென்று தெரிந்தால்
கூட்டிற்குள் ஒடுங்கலாம்.
தாழ் திறக்கும் என்றால்தான்
காத்திருத்தல் சுகம்.
இல்லையெனில்
மரண அவஸ்தை.
-சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வி.
No comments:
Post a Comment