Thursday, May 24, 2012

உடன் வேரொடு தமிழரை அழித்துவிடு


வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்
வேதனை நெருப்போ எனைச்சுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும் இன்றுவரை-உலகில்
ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
எதற்கு இறைவா அழித்துவிடு

படமதைப் பார்த்து அழுதேனே-இனி
பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
இரக்க மின்றியா கண்துஞ்சல்!
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்
மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
கதர உதிர நாளுமென

இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்
ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
செழிக்க வாங்கித் தருவாயா

-புலவர் சா இராமாநுசம்.

No comments:

Post a Comment