Wednesday, August 31, 2011

பெயரெச்சமானவள்…

ஞாபகச் சிறுவாடு

ஊறுகாய் சுமந்த மண் ஜாடி
தாத்தாவின் வெற்றிலைப் பெட்டி
கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
படித்துச் சிலாகித்த பாரதி கவிதை
பயந்தபடி நிற்கும் பள்ளிப் புகைப்படம்
ஆசையாய்ச் சொல்ல ஐந்தாறு கதை
சொந்த வீட்டுத் தோட்டத்து மண்
பால்ய கால நண்பரின் புது வீட்டு முகவரி
திருமணத்திற்குப் பிறகு பார்த்த படம்
இவைகளோடு...
பரம்பரைக்காய் சேமியுங்கள்
கடைசியாய் வந்த கடிதத்தையும்...

-கவிதா.

ஆவாரம்பூக்களைத் தெரிந்திருக்கவில்லை
மரமல்லியென்றால் என்ன ஸ்வீட்டா? என்கிறாள்
நல்லவேளையாய் கொன்றை மரங்களைப் பார்த்திருக்கிறாள்
பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது
-அய்யனார்.

பூனையும் சூரியனும்

பூனை கண்களைத் திறந்தது
சூரியன் உள்ளே நுழைந்தது.

பூனை கண்களை மூடியது
சூரியன் அங்கேயே நின்றது.

இப்பொழுது விளங்குகிறது
இரவில் பூனை விழிக்கும் வேளை
இரண்டு சூரியத் துண்டுகள்
இருட்டில் தெரியும் வித்தை.


பெல்ஜியக் கவிதை - மோரிஸ் கரம்
தமிழாக்கம் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர்.

அது ஒரு பறவை ஒற்றைப் பனைமர உச்சியில்
தனித்தொரு பருந்தின் தவசு
அரைவட்டக் கோணத்தில்
தரைநோக்கி அலையுமதன் பார்வை
அவ்வப்போது வான் நோக்கியும்
இரை கண்டால் தரைநோக்கிப் பாய்ச்சல்
இல்லையேல் விண்ணோக்கிப் பறந்து
வட்டமிட்டு மிதக்கும்
அதுவொரு பறவை
இரை அதற்குத் தேவை மட்டும்
பறந்து களித்தலே அதன் இலக்கு.

-கவிஞர் ராஜமார்த்தாண்டன்.

கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.

-எம்.யுவன்(யுவன் சந்திரசேகர்).

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பது போல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை.

-பிரதீபன்.

பெயரெச்சமானவள்…

நதியில் உன் பெயர்
எழுதி முடிக்கும்முன்பே
நகர்ந்துவிட்டிருந்தது
நதியும் பெயரும்
விரல்களில் உன்
பெயரெச்சம்…

- தமிழ்ப்பறவை.
சல்லிக்கற்கள்

மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.

-செல்வேந்திரன்.

No comments:

Post a Comment