Wednesday, August 3, 2011

இக்கவிதையில் விட்டுச் செல்கிறேன்

என்னை நனைக்கும் ஆனந்த அருவியின்
ஊற்றுப் புள்ளி உன் கண்கள்
இனிய கனவெனும் விதையூன்றி
என்மீது வழிந்து பொழிகிறது
தாளம் போடும் மனம்தீண்டி
காதல் இசையைச் சேர்க்கிறது

எங்கிருந்து வந்தாயோ
எதைத்தான்நீ கண்டாயோ
இமைக்காமல் தொடர்கிறது உன்பார்வை
என்மனசை அறிவாயோ
என்ஆவல் தணிப்பாயோ
கணம்தோறும் வளர்கிறது என்காதல்

நெஞ்சின் ஏக்கத்தை எடுத்துரைக்க
நேருக்கு நேர்காண விழைகின்றேன்
ஆயிரம்ஜோடிக் கண்நடுவே
அடையாளம் தெரியாமல் தவிக்கின்றேன்
கோடிக் கணக்கான கூட்டத்தில் கூட
எளிதாக என்னைத் தொடுகிறாய் நீ

காணாத தோல்வியின் சுமையழுந்த
சோர்வோடு தளர்ந்து நிற்கிறேன் நான்
உன் கண்ணில் பதிக்க இருந்த முத்தத்தை
இந்தக் காற்றில் பதித்துச் செல்கிறேன்
உன் காதில் சொல்ல இருந்த செய்தியை
இக்கவிதையில் விட்டுச்செல்கிறேன்.


- பாவண்ணன்.

No comments:

Post a Comment