Sunday, August 21, 2011

கவிதை இறகு -ஆவணி

ஒண்ணும் ஒண்ணும் பூஜ்யம்

"ஆரப்பா அது அப்பாரு தோட்டத்துல
கேணியோரம் ஒக்காந்து கேவிக் கேவி அழுகுறது?
விசுக்குனு காத்தடிச்சா விழுந்துருவ கெணத்துக்குள்ள
எழுந்திருச்சு வந்திரப்பா ஏகப்பட்ட தண்ணியப்போவ்!"

"ஆடு மேச்சு வர்ற அழகுமலைத் தாத்தா...
கேடு கெட்டவன் நான் பாவம் வரும் என்னப் பாத்தா!
படிச்சிருந்தும் கூறுகெட்ட என் சேதி கேட்டா
அனுதாபப்படமாட்ட அழகுமலைத் தாத்தா!"

"காளியம்மா மகனுக்கு கவல என்ன கவல?
கண்ணுல வந்த தண்ணி கமலத் தண்ணி போல!
பொட்டப்புள்ள மாதிரி பொங்கிப் பொங்கி அழுவாம
பொறுமையா நடந்தத என்னான்னுதேன் சொல்லு!"

"சீமையில படிக்கிறப்ப சிநேகிதம் வெச்சிருந்தேன்
சிறுக்கி ஒருத்தி என்னைய சிரிச்சு மயக்கிபுட்டா!
பாவிப் பய நானும் படிக்க வந்த பொண்ணுக்கிட்ட
பதிலுக்குப் பல்லக் காட்டி பள்ளத்துல விழுந்து புட்டேன்!

மல்லிகப் பூவாட்டம் அவ மனசு ரொம்ப வெள்ளை
அந்த மம்மதனும் பார்த்தான்னா மறந்துருவான் வில்லை!
மத்தியான வெயிலடிக்கும் மாடியில நின்னிருப்பா!
இந்த மச்சானப் பார்க்கணும்னு மணிக்கணக்கா காத்திருப்பா
காலாற நடந்து போயி கடைக்கு கீழ நின்னுக்குவேன்
கண்ணும் கன்ணும் கலந்து பேசும் காதல் கத பத்தாயிரம்!
நெத்திய சொறிஞ்சா நெருங்கி நெருங்கி வரணும்
பொடனிய சொறிஞ்சா போய் ஒளிஞ்சுக் கிடணும்
கன்னத்த தடவிக் கிட்டா காலையில பாப்போம்னு
கைசைகை வெச்சிருப்போம் கடவுளுக்கும் தெரியாது!
அவ மனசுல பாதிய என் உசுருக்குள்ள வெச்சிருந்தா
என் உசுருல பாதிய அவ மனசுக்குள்ள மறச்சிருந்தா!

பக்கத்து வீட்டுல பச்சோந்தி ஒருத்தன்
வத்தி வச்சுப்புட்டான் - அவ அப்பன்கிட்ட போயி

எளிய சாதி பயலோட என்னடி ஒனக்குப் பழக்கம்னு
அடிச்சுப்புட்டான் அப்பன்காரன் அம்புட்டு அடி அவள!
இரும்புக் கம்பிய காயவெச்சு
இழுத்தானாம் அழுக அழுக சனியன் புடிச்ச சாதியில
சாவு வந்து விழுக!
என் கண்ணம்மா கன்னத்துல கையளவு காயம்!
ஒதட்டோரம் குத்துனதுல ஒறஞ்சு போச்சாம் ரத்தம்...
முதுகுல ஒதச்சிருக்கான் மூலையில விழுந்திருக்கா...
சாலையில போன சனம் சன்னல் வழி பாத்திருக்கு!

பச்சப்புள்ள பூ ஒடம்பு என்னகதி ஆச்சு
படுத்துக்கிட்டு நெனச்சுப் பாத்தேன் பாய் நனஞ்சு போச்சு

மருந்து கூடப் போடாம போனான் பாவி மட்ட
பூச்சி மருந்தக் குடிச்சு இவ போயிட்டா சாமி கிட்ட

உசிரோட இருந்தாத் தான சாதி வந்து பிரிக்கும் - நான்
உடம்பை விட்டுப் போய் அவளச் சேர எது தடுக்கும்?"
****
அழகுமலைத் தாத்தா கேட்டது தண்ணி செதறும் சத்தம் - அது
பழகி வச்ச மயிலைச் சேர அந்தப் பய குடுத்த முத்தம்.

- 'தேனி' ஆர்.ஜெகதீசன்.

No comments:

Post a Comment