Wednesday, August 31, 2011

ஒரு வீடு


காலம் யாருக்குங் காத்திராது நழுவுகிறது
நாற்றிசைப் பாதைகளில்
எதிர்ப்படும் மாந்தரில் எவரும்
அறிந்தவராயில்லை.
பயணங்களில்
கடக்கின்ற பிரதேசங்களின் தேசப் படங்களில்
முகவரி பற்றிய சந்தேகங்களுந் தீர்வதாயில்லை.

விரையும் வாகனத்தினூடு தென்படும்
ஊரோரக் குடில்
கையசைக்கும் சிறுமி
யாரோ கைவிட்ட ஒரு வீடு
வெளேரென்ற செம்மறியாட்டுக் கூட்டம்
சூரியகாந்திப் பூக்கள்
சிறுபழக்கடை என எல்லாமே
எப்போதோ விட்டுப் பிரிந்தவைகளையும்
அழிக்கப்படுகின்ற ஒரு வரலாற்றையும்
ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

-விநோதினி.

No comments:

Post a Comment