Wednesday, August 31, 2011

என் காதலும் நானும்

இனி எனக்குப் பேச எதுவுமில்லை
வாழ்வின் மெய்மைகளையெல்லாம் களைந்துவிட்டு
இறங்கிய நதியில்
ஊர்ந்து வரும் அவன்
பருகக் காத்திருந்ததுபோல் ஆயிற்று
மரணம் சம்பவிக்கும் அவனது தேகத்தின்
எச்சில்குளத்தில் மூச்சுத் திணறுகிறேன்

ஒரே காதலின் மாதிரிகள் தாம் எல்லாமும்
எதுவும் தவறில்லை;
கனவுகளிலிருந்து பிய்த்து இழுத்துச் செல்லும்
துயரத்தின் வலிமையே
காலமாய் உருமாறுகிறது
நீரைப் பிரித்துப் பிரித்துக் களிக்கும்
அவன் பரிசளித்த மயானம்,
குருவிகள் வந்தமர ஏங்கும் எனது விழிகள்
இவற்றோடெல்லாம்
நான் என்ன செய்துவிடமுடியும்?

புத்தகங்களுக்குள் உலாவும் கதைராட்டினத்தில்
அவன் கட்டிவிட்ட முத்தங்கள்
சுழன்று உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன
இனி எனக்குப் பேச எதுவுமில்லை
அவனிலிருந்து வெளியேறிப்
பறக்க வேண்டும் பிளிறி
கரையில் உலரும் எனது ஆடைகளையும்
வாரிக்கொண்டு

- குட்டி ரேவதி.

No comments:

Post a Comment