Thursday, July 19, 2012

கவிதை இறகு - ஆடி


அதிசயம்
திண்டுக்கல் பக்கம்
பயணிக்கிறபொழுதெல்லாம்
திராட்சைத் தோட்டங்கள்
கண்ணைக் கவரும்

சத்தியமங்கலத்தில்
வேலைகிடைத்தபோதுதான்
முதன் முதலாக
புகையிலைச் செடி பார்த்தேன்

நண்பனைக் காண
கொத்தமங்கலம்
போக நேர்ந்தபோது
மலைகளுக்கு நடுவே
மல்லிகைத் தோட்டங்கள்

நீக்ரோவின் முடியழகாய்
மனத்தைக் கவ்வின
ஊட்டி மலைச் சரிவுகளில்
தேயிலைச் செடிகள்

கன்னியாக்குமரியருகே
ரப்பர் மரங்களில்
பால் வடிவது கண்டு
குழந்தையைப் போல்
குதுகலித்திருக்கிறேன்

காபிச் செடியின்
நெருப்பு நிறக் கனிகளை
வருடிப்பார்த்திருக்கிறேன்
ஏற்காடுக் காடுகளில்

இவையெல்லாம்
அதிசயம்தான்

ஊருக்கெல்லாம் சோறுபோட
நெல்மட்டுமே விதைக்கும்
தஞ்சாவூர்க்காரனுக்கு.


-கோ .வசந்தகுமாரன்.
"மனிதன் என்பது புனைபெயர் "

No comments:

Post a Comment