Thursday, October 21, 2010

உனக்குத் தெரியுமா

வெளிச்சம் வெப்பமாகத் தொடங்கும் வேளையில்
உடைந்த நடைபாதை வழியே
ஓடி ஓடி வருவாய்
ஷட்டர்களுக்கான திறவுகோல்களுடன்

வாடிக்கையாளர் அற்ற மதிய வேளைகளிலும்
ஷோகேஸ் பொம்மைக்கருகில் நின்றபடி
வெறித்துப் பார்த்திருப்பாய் தகிக்கும் தார்ச்சாலையை

இரவுச்சூடன் ஏற்றி திருஷ்டிக் காய் உடைத்த பின்
மதிய உணவு டிபன் பாக்ஸைக்
கக்கத்தில் இடுக்கியபடி மறைந்து போவாய்
அருகிலிருக்கும் இருளொன்றின் வழியாக

வண்ணத்துணிகளை விரித்துப் போடுவதிலும்
மடிப்புக் கலையாமல் அடுக்கி வைப்பதிலும்
நிபுணத்துவம் அடைந்துவிட்டிருக்கிறாய்

குளிர்சாதன கண்ணாடி அறையிலிருந்து
புன்னகையுடன் மீள கற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாய்

உனக்குத் தெரியுமா
உன் முதலாளி வீட்டில்
இன்னொரு முதலாளி பிறந்திருப்பது.

- மகாதேவன்
ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது

No comments:

Post a Comment