Wednesday, October 20, 2010

தடம்

சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்த பேரிளம்பெண்
அவ்வளவு அழகாயிருந்தாள்

அவளருகில் அமர்ந்திருந்த கணவனை
நான் பார்க்கவும்
வானில் கடூரமாக
இடி இடிக்கவும்
சரியாகயிருந்தது

நின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளை
கேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்

யாரோ ஒருவரின் குழந்தையை
ஆவல் ததும்ப வாங்கி
மடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்
ஒரு ஏக்கம் தெரிந்தது

விதிவிலக்காக அவளொருத்தி மட்டும்
சன்னலைத்திறந்துவைத்து
மழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்

இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்
அவள் முகம் மறந்தாலும்
என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்
அவள் கழுத்திலிருந்த
சுருக்குக் கயிற்றின் தடம்

-- கல்குதிரை(பனிக்காலங்களின் இதழ்)
ஆசிரியர், எழுத்தாளர் கோணங்கி & கவிஞர் வெய்யில்

No comments:

Post a Comment