சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்த பேரிளம்பெண்
அவ்வளவு அழகாயிருந்தாள்
அவளருகில் அமர்ந்திருந்த கணவனை
நான் பார்க்கவும்
வானில் கடூரமாக
இடி இடிக்கவும்
சரியாகயிருந்தது
நின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளை
கேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்
யாரோ ஒருவரின் குழந்தையை
ஆவல் ததும்ப வாங்கி
மடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்
ஒரு ஏக்கம் தெரிந்தது
விதிவிலக்காக அவளொருத்தி மட்டும்
சன்னலைத்திறந்துவைத்து
மழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்
இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்
அவள் முகம் மறந்தாலும்
என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்
அவள் கழுத்திலிருந்த
சுருக்குக் கயிற்றின் தடம்
-- கல்குதிரை(பனிக்காலங்களின் இதழ்)
ஆசிரியர், எழுத்தாளர் கோணங்கி & கவிஞர் வெய்யில்
Wednesday, October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment